Monday, May 19, 2025

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 14 : நிலம் பெயர்ந்தாலும் சொன்ன சொல் தவறாதே!- இலக்குவனார் திருவள்ளுவன்



(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 13: உழவும் தொழிலும் சிறக்கட்டும்; செல்வம் பெருகட்டும்! – தொடர்ச்சி)

 “நிலம்பெயரினும் நின்சொற் பெயரல்”

        – புறநானூறு, பாடல் எண்-3, அடி 14.

பாடியவர்: இரும்பிடர்த் தலையார்
பாடப்பட்டோர்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி
திணை : பாடாண்
துறை : செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்

நில நடுக்கம் ஏற்பட்டு, இடம் பெயர்ந்தாலும் நீ சொன்ன சொல்லில் இருந்து தவறிச் செல்லாதே என்கிறார் புலவர்.

இது மன்னனுக்கான அறிவுரை என்றாலும் அனைத்து மக்களுக்குமான அறிவுரையுமாகும்.

இப்பாடல் மூலம் நாம் அறிய வரும் சொற்களையும் பார்ப்போம்.

இப்பாடலின் முதல் அடி “உவவுமதி யுருவின் ஓங்கல் வெண்குடை” என்பதாகும்.

அஃதாவது முழு நிலவின் வட்ட வடிவம் போன்ற உயர்ந்த வெண்கொற்றக் குடை என்கிறார்.

முதற் சொல்லாகிய உவவு மதி என்பது முழுநிலா நாளைக் குறிப்பிடுகிறது. உவவு, உவா என்பன நிலவைக் குறிக்கும். வெள்ளுவா என்பது இன்றைக்குப் பெளர்ணமி எனப்படுகிறது. காருவா என்பது இன்றைக்கு அமாவாசையைக் குறிக்கிறது.

உவவு மதி என்றாலும் உவா மதி என்றாலும் நிறை நிலாவையே குறிக்கின்றன. திங்கள் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டுதான் மாதக் கணக்கு மதிப்பிடப்படுகிறது. இவ்வாறு காலத்தை மதிப்பிட உதவுவதால் இதனை மதி என்றனர்.

மதியின் அடிப்படையிலான காலத்தை மாதம் என்றனர். இவ்வாறு தமிழ்ச் சொற்கள் அறிவியல் அடிப்படையிலேயே குறிக்கப் பெற்றுள்ளன.

சங்கக்காலம் தொகுக்கப்பட்ட காலத்திற்கு முற்பட்டவர்களே புலவரும் வேந்தரும். ஆதலின் இப்புலவரின் இயற்பெயர் அறிய இயலாமல் போய்விட்டது.

“பாண்டிய அரசன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி யானையின் ‘இரும்பிடர்த் தலையிருந்து’ மருந்தில் கூற்றம் என்னும் நாட்டுப் பகுதியைக் கைப்பற்றினான்” என்று புலவர் தம் பாடலில் (அடி 11-12) குறிப்பிட்டுள்ளார்.

புலவரின் இயற்பெயர் தெரியாத நிலையில் புறநானூற்றைத் தொகுத்தவர் இப்பாடலில் வரும் இவ்வடிகளைக் கொண்டு இப்புலவருக்கு இரும்பிடர்த் தலையார் என்று பெயர் சூட்டியுள்ளார்.

சொன்ன சொல் தவறாமை என்பது பழந்தமிழ் வேந்தர்களின் அரிய பண்பாகும்.

 “நிலம் திறம் பெயரும் காலைஆயினும்,
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே”

            பதிற்றுப்பத்து – 63, அடிகள் 6 – 7.

என நிலம் பெயர்ந்தாலும் – நில நடுக்கம் ஏற்பட்டாலும் – சொன்ன சொல் பொய்க்கும் படி நடக்காதவன் எனச் சேரலாதன் அந்துவஞ் சேரல் பண்பைக் கபிலர் பாராட்டுகிறார்.

நிலப்பெயர்வு போன்று ஆட்சி மாறும் சூழல் ஏற்பட்டாலும் வாக்கு தவறாதே என்கிறார்.

இன்றைய அரசியலாளர்கள், பதவி போவதாக இருந்தாலோ, ஆட்சி இழக்கப்படும் சூழல் வந்தாலோ, செல்வ இழப்பிற்கு வாய்ப்பு இருந்தாலோ, சொன்னதையாவது காக்க வேண்டியதாவது அதையெல்லாம் தூக்கி எறி என்று உடனே தடம் புரளுவார்கள். ஆனால், சொன்ன சொல்லைக் காக்க வேண்டும் என்ற அறஉணர்வு அனைவருக்கும் வேண்டும்.

“அம்ம வாழி, தோழி!-காதலர்
நிலம் புடைபெயர்வதாயினும், கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே”

             – மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார், நற்றிணை 289 : 1 – 3

இப்பாடலில் இந்நிலம் தன் நிலையினின்று பெயர்வதாயிருந்தாலும் உன் காதலர் தாம் சொன்ன சொல்லைத் தவறமாட்டார் என்கிறார் தோழி தலைவியிடம்.

எனவே, சொல்தவறாமை என்பது வேந்தர்களுக்கு மட்டுமல்ல, தனி மனிதருக்கும் உரிய பண்பே என உணரலாம்.

நிலம் பெயர்ந்தாலும் சொல் தவறாமை வேண்டும் என்பது குறித்துக் கூறுவதுபோல் புறநானூற்றில் (34 : 5 – 7) ஆலத்தூர் கிழார்,

“நிலம் புடை பெயர்வதாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்”

என்கிறார்.

செய்தி கொன்றோர் என்றால் செய்ந்நன்றி மறத்தலையே அனைவரும் குறிப்பிடுகின்றனர்.

சொன்ன செய்தியைக் கொல்லுதல் என்பது சொன்ன வாக்குறுதியிலிருந்து தவறுதல் என்பதையும் குறிக்கும்.

நிலம் பெயர்தல் என்பது கண்டப்பெயர்ச்சி (continental drift) ஆகும். கண்டப்பெயர்ச்சி என்னும் கருதுகோள் முதன்முதலில் 1596ஆம் ஆண்டு அபிரகாம் ஓர்டிலீயசு (Abraham Ortelius) என்பவரால் முன்மொழியப்பட்டது.

தியோடர் கிறிசுடோஃபு (இ) லிலியென்டல் (Theodor Christoph Lilienthal,1756), அலெக்குசாண்டர் வான் அம்போலுட்டு (1801, 1845), அந்தோனியோ சுனைடர்-பெல்லெக்குரினி (Antonio Snider-Pellegrini,1858) முதலியோரும் கண்டப் பெயர்ச்சி குறித்து ஆய்வுரை வழங்கியுள்ளனர்.

பின் 1912ஆம் ஆண்டு ஆல்பிரடு வேகனர் (Alfred Wegener) என்பவரால் கோட்பாடாக விளக்கப்பட்டது.

இக்கண்டப்பெயர்ச்சியைத்தான் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே சங்கப் புலவர்கள் சங்க இலக்கியங்களில் நிலம் புடை பெயர்தல் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தகைய இயற்கை நிகழ்வைக் கொண்டு புலவர்கள் கூறியதுபோல், நாமும் நிலமே பெயர்ந்தாலும் சொன்ன சொல் தவறாமல் இருப்போம்!

தாய், 19.05.2025

Wednesday, May 14, 2025

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 13: உழவும் தொழிலும் சிறக்கட்டும்; செல்வம் பெருகட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சங்கப்புலவர்கள்பொன்னுரை – 12 : அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை! – தொடர்ச்சி)

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 13

உழவும் தொழிலும் சிறக்கட்டும்; செல்வம் பெருகட்டும்!

 “நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க…”

ஐங்குறுநூறு – 1, 2
திணை: மருதம்
பாடியவர்: ஓரம்போகியார்

பொருள்: உணவுக் கூலங்கள் (தானியங்கள்) பொலியட்டும் தொழற்கருவிகளுக்கான மாழைகள் (உலோகங்கள்) பெருகட்டும்.

பண்டைத் தமிழ்நாட்டின் நாகரிக உயர்வையும் பண்பாட்டுச் சிறப்பையும் வரலாற்றுக் கூறுகளையும் விளக்குவன சங்க இலக்கியங்கள் என்பார் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்.

எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் சங்க இலக்கியங்கள் ஆகும். எட்டுத் தொகையுள் ஒன்று ஐங்குறுநூறு.

சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்னும் முடிவேந்தர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் என்னும் நல்லிசைப் புலவரைக் கொண்டு தொகுத்த நூலே ஐங்குறுநூறு ஆகும்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து திணைகளைப் பற்றியும் திணைக்கு நூறு என 500 சிறு பாடல்கள் தொகுக்கப்பெற்ற நூல் ஆதலால் ஐங்குறுநூறு எனப்பெற்றது.

இவற்றுள் முதலில் வரும் மருதத் திணையைப் பாடியவர் புலவர் ஓரம்போகியார். இவர் முதல் பாடலில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்த பொன்மொழியே, “நெல்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!“ என்னும் வாழ்த்தாகும்.

நெல் முதலிய கூலங்கள் – அஃதாவது தானியங்கள், பெருக வாழ்த்துகிறார் புலவர் ஓரம்போகியார். உணவுப் பொருள்கள் பெருகினால் பசித்துன்பம் யாருக்கும் இருக்காது அல்லவா?

வேண்டிய அளவு உண்டு வாழும் பொழுது நலமாக வாழலாம் அல்லவா? நலமாக வாழும் பொழுது சிறப்பாகப் பணியாற்றலாம் அல்லவா?

எனவே வளமான வாழ்விற்கு அடிப்படையான உணவுப் பொருள்கள் பெருக வாழ்த்துகிறார்.

‘பொன் பெரிது சிறக்க’ என்று சொல்லும் பொழுது செல்வங்கள் பெருக வாழ்த்துகிறார் எனலாம்.

பொன் என்பது முற்காலத்தில் தங்கத்தை மட்டும் குறிக்கவில்லை. கரும்பொன், செம்பொன் என்றெல்லாம் பொதுவாக அனைத்து மாழைகளும் – அஃதாவது உலோகங்களும், பொன் என்றே குறிக்கப் பெற்றன.

கரும் பொன்னாகிய இரும்பினால்தானே பல கருவிகள் செய்யப்படுகின்றன.

பொன் மிகுதியானால் கருவிகளையும் வேண்டிய அளவு செய்யலாம் அல்லவா?

கருவிகள் இருப்பின் தொழில் வளத்தில் சிறக்கலாம் அல்லவா? எனவே, ‘பொன்பெரிது சிறக்க’ என்பது ஒரு வகையில், தொழில் வளத்தில் சிறப்பதையும் குறிக்கிறது எனலாம்.

ஆக நாட்டைப் பொருத்தவரை வேளாண்மையிலும் தொழிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்துவோம் நாம்!

வீட்டைப் பொறுத்தவரை உணவுப் பொருள்களும் செல்வமும் குவிந்து இல்லாமை இல்லாமல் ஆகட்டும் என வாழ்த்தலாம் நாம்!

வாழ்த்தலாம் நாம் எனில் என்ன பொருள்? நாம் ஒருவரை ஒருவர் வாழ்த்தி வளமாவோம் எனப் பொருள்.

“பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை” என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். பொருள் இல்லாதவரை ஒரு பொருட்டாக யாரும் மதிக்க மாட்டார்கள் என்றும் அவரே கூறுகிறார். இல்லானை இல்லாளும் வேண்டாள் அல்லவா?

ஆகப் பொருளாகிய செல்வம் பெருகவும் உணவுப் பொருள் பெருகவும் உழைக்க வேண்டும்! சலிப்படையாமல் உழைக்க வேண்டும்! ஓயாமல் உழைக்க வேண்டும்!

இவ்வாழ்த்தின் நோக்கம் சோம்பலை விரட்டியடிக்க வேண்டும்! துரத்தியடிக்க வேண்டும்! என்பதுதான்.

உழைக்காதவனைக் கண்டால் நிலம் என்னும் நங்கை வெட்கப்படுவாள் என்று அல்லவா தெய்வப் புலவர் கூறுகிறார்.

“அடடா! நம்மைப் பண்படுத்தி வளப்படுத்தாத ஒரு சோம்பேறியிடம் அல்லவா நாம் அடைக்கலமாகி உள்ளோம்” என அவனிடம் இருக்கும் நில மங்கை வெட்கப்பட்டு வேதனைப்படுவாளாம்.

நிலமகள் வேதனைப்படும் பொழுது வளமாக நாம் எங்ஙனம் வாழ இயலும்?

எனவே, நம் உழைப்பில் பிழைப்போம் என்னும் உறுதியை எடுத்துக்கொண்டு உழைத்தால், நெல்பல பொலியும்! பொன்பல பெருகும்!

இன்றைக்கு நாம் பிறந்த நாளாக இருந்தாலும் பதவி பெற்று வாழ்வில் சிறந்த நாளாக இருந்தாலும் திருமண நாளாக இருந்தாலும் வேறு சிறப்பு நாளாக இருந்தாலும், ஆங்கிலத்தில் வாழ்த்துவதையே பெருமையாகக் கருதுகிறோம்!

அறியாமலும் புரியாமலும் பொதுவாக நாம் வாழ்த்தை வெளிப்படுத்துவதைவிட மகிழ்ச்சியாகவும் இன்பமாகவும் உள்ளக் கருத்தை வெளிப்படுத்தும் வகையிலும் நாம் அடைய வேண்டிய சிறப்பைக் குறிக்கும் வகையிலும் வாழ்த்துவதுதானே நமக்கும் சிறப்பு! வாழ்த்தைப் பெறுவோருக்கும் சிறப்பு!

அந்த வகையில், பிறர் அடைய வேண்டிய சிறப்பை நம் தமிழில் குறிப்பிட்டு வாழ்த்தும் பொழுது நம் எண்ணத்திற்கு வலிமை உண்டாகி வாழ்த்து நிறைவேறும்.

எனவே, போலியான பிறமொழி வாழ்த்தைவிட உண்மையான நம்மொழி வாழ்த்தே நலம் சேர்க்கும்! வளம் சேர்க்கும்! என்பதைப் புரிந்து நற்றமிழில் வாழ்த்துவோம்!

எனவே, சங்கப் புலவர்கள் பொன்னுரைகளைப் படிக்கும் ஒவ்வொருவர் இல்லத்திலும் நெல்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!

தாய், 14.05.2025

Sunday, May 11, 2025

குறள் கடலில் சில துளிகள் 28. – துன்பம் வந்ததை நீக்கி, வருவதிலிருந்து காப்போரைத் துணையாகக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(குறள் கடலில் சில துளிகள் 27. அறமறிந்த அறிவு உடையவரைத் துணையாகக் கொள்க! – தொடர்ச்சி)

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்.  

(திருவள்ளுவர்,  திருக்குறள், அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்,  குறள் எண்:௪௱௪௰௨ – 442)

பதவுரை: உற்ற-நேர்ந்த; நோய்-துன்பம்; நீக்கி-விலக்கி; உறாஅமை-வராத வண்ணம்; முன் – (வரும்)முன்னால்; காக்கும்-காப்பாற்றும்; பெற்றியார்-தன்மையுடையார், இயல்புடையர்; பேணி-நலன்பாராட்டி,; கொளல்-கொள்க.

பொழி்ப்புரை: வந்த துன்பம் நீக்கி, வர உள்ள துன்பத்திலிருந்து முன்னதாகவே காக்கும் பெரியோர் துணை கொள்ள வேண்டும்.

மணக்குடவர்: அரசர் தமக்குற்ற நோயை விடுவித்துப் பின்பு துன்பமுறாமல் முன்னே காக்கவல்ல தன்மையுடையாரை விரும்பிக் கொள்க. பெற்றியாரென்று பொதுப்படக் கூறினமையால், இது மந்திரிகளைக் கூட்டுமாறு கூறிற்று.

பரிமேலழகர்: உற்ற நோய் நீக்கி – தெய்வத்தானாக மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை நீக்குமாறு அறிந்து நீக்கி ; உறாமை முற்காக்கும் பெற்றியார் – பின் அப்பெற்றியன வாராவண்ணம் முன் அறிந்து காக்கவல்ல தன்மையினையுடையாரை; பேணிக்கொளல் – அரசன் அவர் உவப்பன செய்து துணையாகக் கொள்க. (தெய்வத்தான் வரும் துன்பங்களாவன: மழையினது இன்மை மிகுதிகளானும், காற்று தீ, பிணி என்ற இவற்றானும் வருவன. அவை கடவுளரையும் தக்கோரையும் நோக்கிச் செய்யும் சாந்திகளான் நீக்கப்படும். மக்களான் வரும் துன்பங்களாவன: பகைவர், கள்வர், கற்றறிந்தார், வினை செய்வார் என்றிவர்களான் வருவன. அவை சாம பேத தான தண்டங்கள் ஆகிய நால்வகை உபாயத்துள் ஏற்றதனால் நீக்கப்படும். முற்காத்தலாவது: தெய்வத்தான் வருவனவற்றை உற்பாதங்களால் அறிந்து அச்சாந்திகளால் காத்தலும், மக்களான் வருவனவற்றை அவர் குணம், இங்கிதம், ஆகாரம், செயல் என்பனவற்றுள் அறிந்து, அவ்வுபாயங்களுள் ஒன்றால் காத்தலும் ஆம் ; ஆகவே புரோகிதரையும் அமைச்சரையும் கூறியவாறாயிற்று. இங்கிதம் – குறிப்பால் நிகழும் உறுப்பின் தொழில். ஆகாரம் – குறிப்பின்றி நிகழும் வேறுபாடு. உவப்பன – நன்கு மதித்தல் முதலியன.)

பரிமேலழகர் வான் வழி இயற்கை இடர்களை முன்கூட்டி அறிதல் என்றதும் தம் சாதிப்பற்றால் புரோகிதர் எனக் கூறிவிட்டார். வான் வழி இடர்களைக் கணித்து அறியும் வானியலறிஞர்களையும் நில நடுக்கம் போன்ற புவியியல் இடர்களை எதிர்நோக்கி அறியும் புவியியல் அறிஞர்களையுமே திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வறிவியலறிஞர்களின் துணை இருப்பின் வர உள்ள இடர்களை அறிந்து அவற்றைத் தடுக்கும் அல்லது ஏற்படும் துன்பங்களை மட்டுப்படுத்தவும் துன்பத்தைக் குறைக்கவும் முடியுமல்லவா? எனவேதான் திருவள்ளுவர் இத்தகையோரையும் உள்ளடக்கிப் பெற்றியார் பேணிக் கொளல் வேண்டும் என்றார்.

பரிப்பெருமாள்: அரசர்க்கு உற்ற நோயை விடுவித்துப் பின்பு துன்பமுறாமல் முன்பே காக்கவல்ல தன்மையுடையாரை விரும்பிக் கொள்க. (நோய் = துன்பம்)

பரிதி: ஒரு விதனம் வருமுன்னே விதனம் வராமல் காத்து அப்படிக்கு விதனம் வந்தால் அந்த விதனத்தை நீக்கும் உபாயஞ் செய்யும்பெரியோரைப் பேணிக்கொள்வான். (விதனம் = துன்பம்)

காலிங்கர்: வேந்தரானவர் தாம் யாதானும் ஒருவழியால் உற்றது ஓர் இடர் உளராயின் மற்று அதனையும் துடைத்துப் பின் ஓர் இடர் உறாதவாறு முன்னுறத் தேர்ந்து காக்கும் பெரியோரைப் பேணித் துணையாக கொள்க.

சி இலக்குவனார்: தமக்கு வந்துள்ள துன்பத்தை நீக்கிப், பின் அவை தம்மை வந்து அடையாமல் முன் அறிந்து காப்பாற்றவல்ல இயல்பினை உடையாரை விரும்பித் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.

மழையின்மை, அதனால் ஏற்படும் வறட்சி, பெருமழை, அதனால் ஏற்படும் பெரு வெள்ளம்,  கடுங்காற்று, புயல், கொள்ளைநோய்/தொற்றுநோய், நிலநடுக்கம், நிலச்சரிவு, கடல்கோள் முதலியன இயற்கைப் பேரிடர்கள் ஆகும். இவை வருவதை உணர்ந்து தடுக்க முயன்றாலும் இவற்றால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்க இயலாது. ஆனால் அவற்றை மட்டுப்படுத்த இயலும்.  அவற்றால் பாதிக்கப்பட்டோர்க்குத் துயர் தணிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

இயற்கையாலும் மனிதர்களாலும் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் ஏற்படும் தீங்குகளிலிருந்து காக்க வல்ல பேரிடர் மேலாண்மையர்கள் துணை தேவை. இவற்றுக்கான நோயியல் அறிஞர்கள், போரியல் வலலுநர்கள், வேளாண் அறிஞர்கள், தொழிற்துறை வினைத்திறனாளர்கள் முதலியவர்கள் துணை இருந்தால்தான் இத்தகைய இடர்களிலிருந்து மக்களைக் காக்க இயலும். இப்போது பாக்கித்தான் ஆதரவாளர்களால் ஏற்பட்ட குண்டு வீச்சுக் கொலைகள், அவ்வப்பொழுது கலகக்காரர்களும் கொள்ளைக்காரர்களும் காம வெறியர்களும் போலிச் சாமியார்களும் மூடநம்பிக்கை பரப்புநர்களும் உண்டாக்கும் இன்னல்கள் மனிதர்களால் உண்டாகும் தீங்குகளாகும். ஊழல் அதிகாரிகளாலும் பணியாளர்களாலும் ஏற்படும் அவர்களின் செய்ய வேண்டிய செய்கைகளைச் செய்யாப் போக்குகளையும் செல்வமும் செல்வாக்கும் உடையர்களுக்கு அடிபணிந்து பொதுமக்களுக்கு இடர்கள் ஏற்படுத்துவதையும் நாம் மனிதர்களால் ஏற்படும் தீங்குகளாகக் கருதலாம். சாலைப் பணிகளில் குறைபாடு, நோய்த்தடுப்பில் உரிய செயற்பாடுகளின்மை, விதிமுறைகள் மீறி ஊர்திகளுக்கு உரிமம் வழங்கல், கட்டடங்களுக்கு இசைவு தருதல், கல்வி நிறுவனங்களுக்கு இணைப்பு தருதல் போன்ற பலவற்றால் ஏற்படும் நேர்ச்சிகள்(விபத்துகள்), இடிபாடுகள், தரமற்ற கல்வி முதலியனவும் மனிதர்களால் ஏற்படும் இடர்களே. எனவே, பெற்றியார் என்பதில் நேர்மையான செயற்பாடு உடையவர்களின் துணையையும் உள்ளடக்கிக் கொண்டு பொருள் காண வேண்டும்.

திருவள்ளுவர் வழியில் கம்பரும் இதனைப் பின்வரும் பாடலில் விளக்குகிறார்.

உற்றது கொண்டு, மேல்வந்து

     உறுபொருள் உணரும் கோளார் ;

மற்றுஅது வினையின் வந்தது

     ஆயினும், மாற்றல் ஆற்றும்

பெற்றியர் ; பிறப்பின் மேன்மைப்

     பெரியவர் ; அரிய நூலும்

கற்றவர் ; மானம் நோக்கின்,

     கவரிமா அனைய நீரார்.

(கம்பராமாயணம், அயோத்தியா கண்டம், மந்திரப் படலம், 1409)

தொடர்பான அரிய துறைநூல்களைக் கற்றறிந்தவர் களையும் கம்பர் குறிப்பிடுகிறார். நூலறிவும் பட்டறிவும் இருந்தால்தான் துன்பம் துடைக்கவும் துன்பத்திலிருந்து காக்கவும் இயலும். அதுபோல் கவரிமா போன்ற மான உணர்வுள்ளவர்களையும் குறிப்பிடுகிறார். அவர்கள்தாமே குற்றம் வராமல் விழிப்புடன் செயற்படும் உணர்வுடையவர்களாக இருப்பார்கள். (கவரிமா என்பது கவரிமான் அல்ல. நீண்ட மயிர்க்கற்றைகளைக் கொண்ட இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு விலங்கினம் என்பதற்கு இப்பாடலும் ஒரு சான்றாகும்.)

பொதுவாக உரையாசிரியர்கள், நாடு, அரசர், அரசு, அரசாட்சி என்ற கண்ணோட்டத்திலேயே உரை எழுதியுள்ளனர். இக்குறள் தனியருக்கும் பொருந்தும். ஆட்சிப்பொறுப்பில் இல்லாதவர்களும் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னல்களிலிருந்து நீங்கச் செய்யவும் வந்த துன்பங்களைத் தணிக்கவும் நீக்கவும் இனி வரும் துயரங்களிலிருந்து எதிர்நோக்கிக் காக்கவும் வல்ல பெரியோர் துணை கொள்ள வேண்டும். குடும்பச் சிக்கல்கள், பணிச்சிக்கல்கள், தொழில் சிக்கல்கள் முதலானவற்றில் துணையாக வருவோர் துணையை ஒவ்வொருவரும் கொள்ள வேண்டும்.

எனவே, நல்லாட்சிக்கும் நல் வாழ்விற்கும்

துன்பத்தில் நெறிப்படுத்தும் பெரியோர் துணை கொள்க!

Saturday, May 10, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 971-975 : இலக்குவனார் திருவள்ளுவன்

      11 May 2025      கரமுதல 




(சட்டச் சொற்கள் விளக்கம் 966-970 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

971. Attestationசான்றொப்பம்‌  

சான்றுக்‌ கையொப்பம்‌  

நிறைவேற்றுநர் ஒப்பாவணத்தில் கையொப்பம் இட்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் பொருட்டுச் சான்றாளர் தமது பெயரைக் கையொப்பமாக இடுவது (பி 69, இ.சா.ச.).  

இ.சா.ச. பிரிவு 69 என்பது இந்தியச் சான்றுரைச் சட்டத்தின் (Indian Evidence Act) 69 ஆவது பிரிவைக் குறிக்கிறது. இது சான்றுரையின் சான்றளிப்பு (attestation) பற்றி விவரிக்கிறது.

  இறுதி முறியின் சான்றளிப்பு,  சான்றுரைஞர் கையெழுத்திடுவதைப் பார்த்ததாகக் கூறினால் போதுமானது, தற்செயல் சான்றுரைஞர் சான்றளித்த சான்றுரையைப் பார்த்ததாகக் கூறினால் போதுமானதல்ல.  

நீதிமுறைப் புலனாய்வில் ஒரு பொருளியத்தை மெய்ப்பிக்கவோ பொய்ப்பிக்கவோ உதவும் சட்ட வழிவகை சான்று பொருள் தந்து உள்ளடக்குவதாவது (பி 3, இ.சொ.ச.).  

“இ.சொ.சட்டம்” என்பது “இந்தியச் சொத்துரிமை இடமாற்றச் சட்டம் 1882” (Transfer of Property Act, 1882) என்ற சட்டத்தின் சுருக்கமான வடிவம் ஆகும். இது சொத்துரிமைகளை மாற்றுதல், பரிமாற்றங்கள், சொத்துரிமைகளின் மீதான உரிமைகளை ஒழுங்குபடுத்துவது பற்றி விவரிக்கிறது.  

காண்க:  Attest
972. Attesting witness
(attestor,
attester)
சான்றொப்பமிடுநர்  

சான்றுக் கையொப்பமிடுபவர் எனச்சொல்வதைவிடச் சுருக்கமாகச் சான்றொப்பமிடுநர் எனலாம்.  

testis என்பது இலத்தீன் சொல்லாகும். இதன் உயிரியல் பொருள் முள்ளெலும்பியின் விதைப்பை.   மற்றொரு பொருள் மூன்றாம் தரப்பின் நிலைப்பாடு. அஃதாவது சான்றுரை களிலோ வாதாட்டத்திலோ மூன்றாம் தரப்பினராக இருத்தல். மூன்றாம் தரப்பு சான்று அளிப்பவராக இருக்கிறார். அதனடிப்படையில் இச்சொல்லில் இருந்து உருவானதே attest.     இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு attestor, attester என இரு சொற்கள் உருவாயின.  

attester என்பது பொதுவாகவும் முன்மையானதாகவும் (preferred) பயன்படுத்தப்படுகிறது.  

attestor என்பது பொதுவாக வழக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனைச் ஆவணச்‌ சான்றர் எனலாம். ‌
973. Attitudeமனநிலை   போக்கு  

சட்டத்தில், ஏதோ அல்லது ஒருவரைப் பற்றிய ஓர் உணர்வு அல்லது கருத்து, அல்லது இதன் காரணமாக ஏற்படும் நடத்தை முறை.
974. Attornமற்றொருவருக்கு மாற்று  

புதிய நிலக்கிழாரைச் சட்டப்படி ஒப்புக்கொள்  

ஒரு குத்தகைதாரராக ஒருவரின் கட்பாடுகளை ஒரு புதிய நில உரிமையாளருக்கு மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்தல்.  

ஒருவரின் பூசலில் அல்லது வாதாட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நீதிமன்றத்தின் அதிகார வரம்பை ஒப்புக்கொள்ளுதல்.
975. Attornment   வாடகைதாரரின் ஏற்பு  

புது நிலக்கிழாரை ஏற்றல்  

மாற்று மேலாண்மை ஏற்பு  

உரிமையாளரை ஏற்றல்  

சொத்தை வாங்கிய அல்லது கையகப்படுத்திய புதிய நிலக்கிழாரை நிலக்குடிவாரர் ஒப்புக்கொள்ளுகை (ச.சொ. 1983)

(தொடரும்)

Followers

Blog Archive