(குறள் கடலில் சில துளிகள் 26. விருப்பத்தைப் பகைவர் அறியப் புலப்படுத்தாதே! – தொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள்
27. அறமறிந்த அறிவு உடையவரைத் துணையாகக் கொள்க!
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்: ௪௱௪௰௧ – 441)
பதவுரை: அறன்-அறவழி; அறிந்து-தெரிந்து; மூத்த-முதிர்ந்த; அறிவுடையார்-அறிவுடையவர்; கேண்மை-உறவு, நட்பு; திறன்-கூறுபாடு; அறிந்து-தெரிந்து; தேர்ந்து-ஆராய்ந்து; கொளல்-கொள்க.
பொழிப்பு:
அறநெறியை அறிந்து முதிர்ந்த அறிவினையுடையாரது நட்பை அதன் ஆற்றலை அறிந்து, ஆராய்ந்து அடைய வேண்டும்.( சி.இலக்குவனார்)
“அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க. இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று.” என்கிறார் மணக்குடவர்
இங்கே புரோகிதர் எங்கே வந்தார் என்று தெரியவில்லை. மணக்குடவர் உள்ளத்தில் ஆரியச் சிந்தனை ஆதிக்கம் செலுத்தியதால் புரோகிதர் உள்ளே நுழைந்து விட்டார். திருவள்ளுவர் எங்கும் சடங்கு பற்றியும் அதனைச் செய்பவர் பற்றியும் கூறாத பொழுது இங்கே எங்ஙனம் சடங்கு செய்வோர் துணை பெற வேண்டும் என்றிருப்பார். எனவே, இவ்விளக்கம் தவறாகும்.
“அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை, அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் அறிந்து கொள்க” என விளக்குகிறார் பரிமேலழகர்.
பரிமேலழகர் குறிப்புரை: அறநுண்மை நூலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், ‘அறம் அறிந்து’ என்றார். மூத்தல் – அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவுஉடையார் நீதியையும் உலகஇயலையும் அறிதலை உடையார். [உய்த்துணர்வானும்- உலக நடையை ஆராய்தலானும்; சீலம் – ஒழுக்கம்]
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல். (௪௱௰௫ – 415)
என்கிறார் திருவள்ளுவர். எனவே, பரிமேலழகர் அறிவுடையார் கேண்மை என்பதற்கு ஒழுக்கத்தையும் சேர்த்துள்ளது சரியே.
செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல். (௬௱௩௰௭ – 637)
என உலக இயல்பறிந்து நடப்போரே துணையாக இருக்க வேண்டும் என்பார்.
எனவே, உலக இயல்பையும் அறிந்தவர்களாகவும் துணையாகக் கொள்வோர் இருத்தல் வேண்டும் என்பதும் சரியே.
ஆதலின், நூலறிவாலும் பட்டறிவாலும் முதிர்ந்த அறிவு உடையவரது துணையை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.
திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அறிவுடையார் கூறிய எல்லையில் இருத்தல்;அன்பால் நீங்காமல் இருத்தல் எனவும் பரிமேலழகர் விளக்குகிறார்.
இப்பண்புகள் உடையவர்களே என்றும் நீங்காமல் துணை நின்று வழிகாட்டுவர்.
எனினும் இவ்வறிவுரை அரசனுக்கு மட்டுமல்ல. நல்வழியில் நடக்க விரும்பும் ஒவ்வொருவருக்குமே யாகும்.
வாழ்வியல் அறநூலான திருக்குறள் அறத்தை வலியுறுத்தும்போது நமக்குத் துணையாகக் கொள்ள வேண்டியவரும் அறவாணராக இருத்தல் வேண்டும் எனத் திருவள்ளுவர் வலியுறுத்துவது இயல்புதானே. எனவேதான் முதலிலேயே அறனறிந்தவரைத் துணையாகக் கொள்ள வேண்டும் என்று சொல்லி விடுகிறார்.
அறிவுடையார் துணை எப்போது தேவைப்படுகிறது? ஒரு சிக்கல் வரும் பொழுது அதனைக் களைவதற்கு அறிவு தேவைப்படும். ஒரு செயலைத் தொடங்கும் பொழுது திட்டமிடுவதற்கும் செயல் முறைக்கும் அறிவுரை தேவைப்படும். ஒரு தொழிலைத் தொடங்கும் பொழுது தொழில் தொடர்பான நூலறிவும் பட்டறிவும் உடைய முதிர்ந்த அறிவுடையவரின் வழிகாட்டல் தேவைப்படும். எனவேதான் திருவள்ளுவர் அறிவுடையார் கேண்மையைத் திறனறிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.
எனவே நாம்
அறனறிந்த திறனாளரைத் துணையாகக் கொள்வோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment