(நாலடி நல்கும் நன்னெறி 8 : காமவழி செல்வோர்க்கு ஏமவழி யில்லை  – தொடர்ச்சி)

தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா

வீழா இறக்கும் இவள்மாட்டும் – காழிலா

மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகுந் தன்கைக்கோல்

அம்மனைக்கோ லாகிய ஞான்று.

-நாலடியார், இளமை நிலையாமை 14

பொருள்: கூன் விழுந்து உடல் தளர்ந்து தலை நடுங்கிக் கைத்தடி ஊன்றி வாழும் இம் மூதாட்டி முன்பு இவள் தாய் மூதாட்டியாக இருக்கும் பொழுது இளமை நலம் திகழப் பிறர் மயங்கும் வகையில் இருந்தாள்இளமை நிலையாமையை உணர்ந்து இளமையிலேயே நல்லன  செய்க!

சொல் விளக்கம்: தாழா=முதுகு தாழ்ந்து; தளரா=உட ற்கட்டுத் தளர்ந்து; தலை நடுங்கா=தலை நடுங்கி, தண்டு ஊன்றா=கைத்தடியை ஊன்றி, வீழா=விழுந்து, இறக்கும்=இறக்கப்போகும் மூப்பு நிலையிலுள்ள, இவள் மாட்டும்=இத்தகைய ஒருத்தியிடத்தும், காழ் இலா=உறுதியான அறிவில்லாத; மம்மர்கொள் மாந்தர்க்கு=காம மயக்கத்தைக் கொள்ளுகின்ற மக்களுக்கு, தன் கைக்கோல்=அவள் இப்போது கைத்தடியாக வைத்திருக்கும் ஊன்றுகோல்; அம்மனைக்கோல் ஆகிய ஞான்று= இதே ஊன்றுகோல், அவள் தாயின் கைத்தடியாக இருந்த காலத்தில்; அணங்கு ஆகும் – வருத்துகின்ற காமத் தன்மையையுடைய அழகுருவம் இருந்திருக்கும். (மூப்பு அடைந்துள்ள இவள், இவளின் தாயாக மூப்பில் இருந்த பொழுது இளமையாக இருந்திருப்பாள்)

முதுகு வளைந்து தாழ்ந்து கூன் அடைந்த நிலை தாழா எனப்படுகிறது. காழ் என்பது இங்கே அறிவு உரத்தைக் குறிக்கிறது.

இளமையானவள் முதுமை அடைவாள் எனக் கூறாமல் இன்று முதுமையுற்றிருப்பவள் முன்பு பலரை மயக்கும் இளமை நலத்துடன்தானே இருந்திருப்பாள் எனக் கூறுகிறார் புலவர். அன்றைய இளமை இன்றைக்கு இல்லையே என்பதன் மூலம் இளமை நிலையாமையை உணர்த்துகிறார்.

செங்கையில் ஓர் தடியும் ஆகியே

வருவது போவது ஒருமுதுகூனும்

என்னும் பாடலடிகள் கொண்ட, பட்டினத்தார் முதுமையைக் கூறி இளமை நிலையாமையைச் சொல்லும் நீண்ட பாடல், ‘பட்டினத்தார்’ திரைப்படத்திலும் இடம் பெறும்.

பாலன் இளையன் விருத்தன் என நின்ற

காலம் கழிவன கண்டும் அறிகிலார்

(முதல் தந்திரம், 4. இளமை நிலையாமை, பாடல் 181)

என்கிறார் திருமூலரும்.

நீங்கள் கேட்டவை’ படம் மூலம் கவிப்பேரரசு வைரமுத்துவும்

பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி

இருக்கின்றது என்பது மெய்தானே

என்கிறார்.

இளமை நிலையாமையை உணர்த்துவதற்குத்தான் திருவள்ளுவரும் இப்போது இளமைப்பருவம்தானே, பிறகு அறச்செயல்கள்புரியலாம் என எண்ணாமல் உடனே செய்ய வேண்டும் என்கிறார்.

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.  

(திருவள்ளுவர், திருக்குறள், ௩௰௬ – 36) என்பதே அக்குறள்.

பிறரை மயக்கும் அழகும் காலம் செல்லச் செல்ல உடல் தளர்ந்து அழகிழக்கும். எனவே, நிலையற்ற அழகில் மயங்காமல் நிலையான நல்வினை புரிய வேண்டும்.

நில்லா அழகில் மயங்கி நிலையான பயன் தரும் நற்செயலை மறக்காதே!