(நாலடி நல்கும் நன்னெறி :10 வழி வழியே இறந்தோரைத் தொடர்ந்து செல்வதே இயற்கை – தொடர்ச்சி)
நாலடி நல்கும் நன்னெறி :
11. நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்!
எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகா(து)
எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர்.
நாலடியார், அறிவுடைமை, 243
சொற்பொருள் : கொன்னாளர் = கரிசாளர் (பாவிகள்) ; காழ் = விதை; எனவே, காஞ்சிரங்காயின் /காஞ்சரங்காயின் விதை எனலாம்.
காஞ்சரஞ்காய் என்பது பூவரச மரத்தைப்போல் தோற்றமளிக்கும் நச்சுமரத்தின் காய். இதனை எட்டி மரத்தின் காயாக உரையாசிரியர்கள் தரும் விளக்கம் தவறு என்று செ.சொ.பி.பேரகர முதலி கூறுகிறது.
“இஃது எட்டியைப்போல் கசப்புடையதன்று. தின்றால் ஓரளவு இனிப்பதும், உண்டாரைக் கொல்வதுமாகிய பழங்களைக் காய்க்கும் மரம்.” எனப் பேரகர முதலி கூறுகிறது. சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியும், சாம்பசிவம் மருத்துவ அகரமுதலியும், பிற அகரமுதலிகளும் இதனை எட்டிக் கொட்டை எனக் குறித்திருப்பது தவறு என்றும் பேரகர முதலி கூறுகிறது.
பாடற்பொருள் : எத்தகைய மண்ணில் விதைத்தாலும் காஞ்சரங்காய் தென்னை மரமாக முளைக்காது. எந்த நாட்டில் பிறந்தாலும் நல்லறம் புரிபவர்கள் மேலுலகம் புகுவர். வடநாட்டிலும் பாவிகள் பலர் உள்ளனர்.
வட நாட்டில் பாவிகள் பலர் உள்ளனர் என்பதன்மூலம் வடநாடு உயர்வானது, எனவே, வடவர் அனைவரும் மேலுலகம் புகுவர் என்னும் ஆரியத்தைப் புலவர் மறுக்கிறார்.
நல்லறம் புரிந்தால் நல்லுலகம் செல்வர். தீ வினை புரிந்தால் வீழ்கதி(நரகம்) செல்வர். அவ்வாறிருக்க இங்கே திசையின் அடிப்படை யில் நல்லுலகம் குறித்தும் வீழ்கதி(நரகம்) குறித்தும் கூறியதை எடுத்துக்காட்டாகக் கூ றுவது ஏன்?
தென்னிந்தியாவில் பிறந்தவர் நல்லுலகம் செல்ல மாட்டார்கள்; வட இந்தியாவில் பிறந்தவர்கள் மட்டுமே நல்லுலகம் புக முடியும் என்று சில ஆரிய நூல்கள் கூறுகின்றன. அவற்றை மறுத்து இனத்தின் அடிப்படையிலும் பிறப்பின் அடிப்படையிலும் நல்லுலகமும் வீழ்கதியும் அடைவர் என்பதை மறுப்பதற்காகவே, சனாதனத்திற்கு எதிராகவே நாலடியார் கூறுகிறது.
தென்னாட்டை ‘நரக பூமி’ என்றும் வட நாட்டைப்’ புண்ணிய பூமி’ என்றும் ஆரியம் கூறுகிறது. ஆயினும், வித்தின் இயல்பிற் கேற்பத்தான் மரம் வளர்கிறது. நிலத்தின் தன்னமயி னடிப்படையில் அல்ல. அதைப்போல் மறுமைப் பயன் என்பது அவரவர் செய்யும் நல்வினைகளின் அடிப்படையில்தான். எனவே, நல்லுலகம், வீழ்கதி என்பதன் காரணம் அவரவர் செய்கையே! பிறப்பாலோ பிறப்பிடத்தாலோ இல்லை என நாலடியார் மறுக்கிறது.
இப்பாடல் நாலடியாரில் அறிவுடைமை அதிகாரத்தில் உள்ளது. தீவினை நல்வினை ஆற்றுவது என்பது அவரவர் நல்லொழுக்கம், தீயொழுக்கத்தின் அடிப்படையிலேயே. எனவே, ஒழுக்கத்திற்கு அடிப்படை அறிவுடைமை என்று அறிவுடைமை அதிகாரத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும். (திருக்குறள், ௱௩௰௮ – 138)
என்கிறார் திருவள்ளுவர். ஒழுக்கத்தின் அடிப்படையில்தான் நல்லுலகமும் தீ யுலகமும் என்பதையே திருவள்ளுவர் கூறுகிறார். இதன் மூலம் ஆரியக் கருத்தைத் திருவள்ளுவர் மறுத்துரைக்கிறார்.
இத்தமிழ்நெறியின் வழியிலேயே நாலடியாரும் நல்லன செய்தால் நல்லுலகம் அடையலாம் என்கிறது.
இறப்பிற்குப் பிந்தைய உலகம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் நன்மை செய்தால் நன்மை எய்தலாம் தீமைபுரிந்தால் தீமையே அடைவர் என்பதாகக் கருதலாம்.
முனிவராக இருந்தாலும் தமிழினத்திற்கு எதிராக ஆரியம் கூறும் கருத்துகளுக்குப் புலவர் தக்க எடுத்துக்காட்டுடன் மறுமொழி அளித்துள்ளார். நாமும் காஞ்சிரங்காய் தெங்காகாது என்பதை உணர்ந்து
நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்!
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment