ஃஃஃ 13 June 2025 அகரமுதல
குறட் கடலிற் சில துளிகள் 29 . பெரியாரைப் பேணுக!
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
(திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல், குறள் எண் ௪௱௪௰௩ – 443)
பதவுரை: அரியவற்றுள்-அருமையானவற்றுள், (அருமையான பேறுகளுள்); எல்லாம்-அனைத்தும்; அரிதே-அருமையானதே; பெரியாரை-பெருமையுடையவரை; பேணி-விரும்பி; நலன்பாராட்டி; உவப்பன செய்து; தமர்-தம்மவர்; தமக்கு நெருக்கமான உறவினர், தமக்குச் சிறந்தாராக; கொளல்-கொள்க.
பொழிப்புரை : பெரியோரையே விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராகப் பெற்றுக் கொள்ளுதல், பெறுதற்கரிய பேறுகளுள் எல்லாம் அரிதான பெரும்பேறு ஆகும். (புலியூர்க் கேசிகன், திருக்குறள் – புதிய உரை)
மணக்குடவர், “பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரைக் கூட்டிக் கொள்கை” என்கிறார்.
பரிப்பெருமாள், குறிப்புரையில் “பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரை.அவரைத் தேடிக் கூட்டுதல் அரிது என்றது.” என்கிறார்.
புரோகிதர் ஆரியச் சடங்குகளைச் செய்விப்பவர். இவர்களைத் துணையாகக் கொள்வதற்கான தேவை ஏன் வருகிறது? பல நிலைகளிலும் உள்ள பொதுமக்கள் பெரியாரைத் துணைக் கொள்ள வேண்டும். எனினும் உரையாசிரியர்கள் ஆள்வோர்க்கு முதன்மை கொடுத்து அரசர்க்குத் துணையாக இருப்பவரைக் கூறுகின்றனர். அவ்வாறு கூறும் பொழுது, பெரியாரைத் துணைக்கோடல் என்பது குறித்து விளக்கும் மணக்குடவர் அரசன் குற்றம் அற்றானாயினும், தன்னின் முதிர்ந்த அறிவுடையாரைத் துணையாகக் கொண்டு வினைசெய்ய வேண்டுதல் என்கிறார்.
பரிமேலழகர், அரசன், தீநெறி விலக்கி நன்னெறிச் செலுத்தும் பேரறிவுடையாரைத் தனக்குத் துணையாக் கோடல் என்று சொல்லுகிறார். அத்துடன் “பேரறிவுடையர் என்பவர், அரசர்க்கும் அங்கங்கட்கும் மானுடத் தெய்வக் குற்றங்கள் வாராமல் காத்தற்கு உரிய அமைச்சர் ,புரோகிதர்” என்று விளக்கவும் செய்கிறார்.
உரையாசிரியர்கள் தங்கள் காலத்தில் ஆரியம் ஆதிக்கம் செலுத்திய சூழலில் அல்லது தாங்கள் ஆரியத்திற்கு ஆட்பட்டுத் தேவையே இல்லாமல் ஆரியச்சடங்காளரை, அஃதாவது புரோகிதரை உரையில் சேர்த்தது தவறேயாகும். அவ்வாறு சேர்த்தது தவறு என்னும் பொழுது அமைச்சருக்கு இணையாகப் புரோகிதரைக் கூறுவது பெருந்தவறாகும்.
அரிதான செயல் என்பது எதுவாகும்?
பரிப்பெருமாள் “செய்தற்கரியன வெல்லாவற்றினும் செய்தலரிது” என்கிறார். பரிமேலழகர், “அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது” என்கிறார்.
அரிது என்பதை விளக்கும் பரிதி, “ஒரு மலையையெடுத்து ஒரு மலைமேலே வைத்தல். ஒரு கடுகிலே ஏழுகடலை அடக்கல். இதிலும் பெரியது” என்கிறார்.
காலிங்கர், “கல்வியும் கேள்வியும் அறிவுடைமையும் குற்றங் கடிதலும் பிறவும் ஆகிய செயற்கரிய எல்லாவற்றுள்ளும் பெரிதும் அரிது” என்கிறார்.
இத்தகைய அரிதான செயல்களாக ஆரியச்சடங்குகளையும் அவற்றைச் செய்விக்கும் புரோகிதரையும் கூறுவது தமிழ்நெறிக்கு எதிரான பெருங்கொடுமையாகும்.
துணையாகக் கொள்ள வேண்டிய பெரியாரை விளக்கும்போது, கல்வித்துறையில் சிறந்தவர்கள், படைத்துறையில் வல்லுநர்கள், அறிவியல் துறையில் ஆற்றலாளர்கள், இலக்கியத் துறையில் ஈடிணையற்றோர், வானியலில் வல்லவர்கள் அன்பிலும் பண்பிலும் தலை சிறந்தோர், நல்லாற்றுப்படுத்துவதில் வல்ல அமைச்சர்கள் முதலானவர்களைக் கூறாமல் அவ்வரிசையில் புரோகிதரைச் சேர்த்தது தவறு என உணர்வோம்.
ஆள்வோராயினும் வேறு நிலைகளில் வாழ்வோராயினும் குற்றங்குறையற்ற வாழ்க்கைக்கு நாம் என்றும்
பெரியாரைத் துணையாகக் கொள்வோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment