Showing posts with label அண்ணா. Show all posts
Showing posts with label அண்ணா. Show all posts

Thursday, August 9, 2018

அண்ணாவின் அருகே தம்பியின் துயிற் பேழை – காரணர்களுக்கு நன்றி. : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

அண்ணாவின் அருகே தம்பியின் துயிற் பேழை

– காரணர்களுக்கு நன்றி.

  இந்திய நாட்டின் மூத்த தலைவரும் தி.மு.க.வின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நோய்வாய்ப்பட்டு மரண வாயிலை நெருங்கும் பொழுதே குடும்பத்தினர் அடக்கம் செய்யும் இடம்பற்றி முடிவெடுத்துள்ளனர். எனவேதான் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திரர்(மோடி) அவரைப் பார்க்க வரும்பொழுதே சென்னைக் கடற்கரையில் அறிஞர் அண்ணா நல்லடக்க இடத்தருகே இடம் ஒதுக்க ஏற்பாடு செய்து தருமாறு வேண்டியுள்ளனர். பின்னர் தமிழக முதல்வரை மூத்த தி.மு.க.தலைவர்களும் குடும்பத்தினரும் சந்தித்து விண்ணப்பம் கொடுத்து இடம் ஒதுக்க வேண்டியுள்ளனர்.
  ஆனால், தொடக்கத்தில் தமிழக அரசு இவ்வேண்டுகோளை மறுத்துவிட்டது. இதற்காகக் காழ்ப்புணர்ச்சியால் பாசகவும் அதிமுகவும் வேண்டுகோளை நிறைவேற்றவில்லை என்பது சரியாகப் படவில்லை.
  பாசக அரசியல் பேர அடிப்படையில் கூட்டணி, ஒத்துழைப்புபோன்ற எதையும் எதிர் நோக்கியிருக்கலாம். ஆனால் பாசக முதலான அனைத்துக் கட்சியினருமேஇந்திய அரசியலில்  பல திருப்புமுனைக்குக் காரணமாக இருந்த கலைஞர் கருணாநிதியை இந்தியத் தலைவராகக் கருதி அதற்குரிய மதிப்பை அளித்துள்ளனர். எனவேதான்  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திராத அவருக்காக மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டையும் ஒத்தி வைத்துள்ளனர். இதனால் எல்லாம் பாசகவிற்குத் தமிழ்நாட்டில்  வாக்கு விழுந்துவிடாது. எனவே, காழ்ப்புணர்ச்சியின்றி மதிப்பளித்து உள்ளார்கள் என்றுதான் பாராட்ட வேண்டும்.
  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காந்தி மண்டபம் அருகே 2 காணி நிலம் தருவதாகவும் வேறிடம் கேட்டாலும் தருவதாகவும் அரசு மதிப்புடன் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கும் முன்னரே முதல்வரும் அமைச்சர் பெருமக்களும் காவேரி மருத்துவமனை சென்று மேனாள் முதல்வர் நலம்குறித்து உசாவி வந்துள்ளனர். மேனாள் முதல்வர் செயலலிதா இருந்தால் இதற்கான வாய்ப்பு இருந்திருக்க வாப்பில்லை. ஒருவேளை அவர் அதிரடியாக நேர் மாறாகவும் இருந்திருக்கலாம். அண்ணா சதுக்கத்தில் இடம் தர இயலாமைக்குச் சட்டச்சிக்கல்தான் காரணம் என்பதையும் முதல்வர் விளக்கியுள்ளார்.
  தங்கள் தங்கத்தலைவிக்கு இடம் ஒதுக்கி அடக்கம் செய்ததை எதிர்த்து வழக்கு தொடுத்தவர்களின் தலைவருக்கு இடம் தந்தால் கட்சியில் கொந்தளிப்பு ஏற்படலாம். நாளை வழக்கு முடிவு மாறுபட்டு இருந்தால் நல்லடக்கம் செய்ததைத் தோண்டி அப்புறப்படுத்தும் நிலையும் வரலாம். எனவேதான் இந்தக் கூற்று. இதன் மூலம் தங்களுக்குள்ள சிக்கலைப் போக்க எண்ணி இறுதியில் அதில் வெற்றியும் பெற்றுள்ளளனர்.
 உயர் நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்திற்கு மேல் முறையீட்டிற்குப் போகாமையே அவர்களின் காழ்ப்புணர்ச்சி யின்மையைக் காட்டுகிறது. ஆனால், சூழ்நிலை மாறியிருந்து திமுக ஆட்சியில் செயலலிதாவிற்கு நல்லடக்க இடம் கேட்டிருந்தால், மேனாள் முதல்வர் காமராசர், மேனாள் முதல்வர் சானகியம்மாள் ஆகியோருக்கு இடம் ஒதுக்காததுபோல் குற்றவாளி என்பதையும் கூறி  மறுத்திருக்கவே வாய்ப்பு உள்ளது.
 ஆனால், மக்கள் வேறு வகையாகப் பார்க்கின்றனர். காந்தி மண்டபம் அருகே முதல்வர் எனச் செயலலிதாவிற்கு இடம் ஒதுக்கவில்லை. தங்கள் புரட்சித்தலைவருக்கு அடுத்த நிலையில் இருந்து கட்சியைக் காத்தவர் என அவருக்கு அருகேதான் ஒதுக்கியுள்ளனர்.
  இதுபோல் திமுகவின் தலைவர் அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கட்சியைக் காத்தவர் என்ற முறையில் கலைஞர் கருணாநிதிக்கும் அவர் அருகேதான் இடம் ஒதுக்க வேண்டும் என்பது திமுகவினரின் கருத்து மட்டுமல்ல. பெரும்பாலான பொதுமக்களும் அவ்வாறுதான் கருதினர்.
  கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருக்கும்பொழுது மறைந்தால்தான் அறிஞர் அண்ணாவின் அருகே அடக்கம் செய்ய இயலும். இல்லையேல் அறிவாலயத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டிவரும். எனவே, அவர் மறைவின்பொழுது ஆட்சியில் இருக்க வேண்டும் எனத் திமுக தொண்டர்கள் பலரும் கூறியுள்ளனர். கலைஞர் கருணாநிதியும் அவ்வாறு எண்ணம் கொண்டுள்ளதாகவும் கூறுவர். ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தபொழுதும் அவரும் தொண்டர்களும் விரும்பியவாறு அறிஞர் அண்ணாவின் அருகேயே தம்பி கருணாநிதிக்கும் இடம் ஒதுக்கப்பட்டுவிட்டது.
  13 முறை  சட்ட மன்ற உறுப்பினராகவும் ஒரு முறை சட்ட மேலவை உறுப்பினராகவும் 5 முறை முதல்வராகவும்  நாட்டின் தலைமையமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட வழிகாட்டியாகவும் விளங்கிய மாபெரும் தலைவர்கலைஞர் கருணாநிதி; அவர் விரும்பியவாறும் மக்கள் விரும்பியவாறும் அறிஞர் அண்ணாவின் துயிற்பேழை அருகே தம்பி கலைஞர் கருணாநிதியின் துயிற்பேழையையும் அடக்கம் செய்ய முடிந்துள்ளது.
  இதற்கு ஏற்ப சென்னைக் கடற்கரையில் அடக்கம் செய்ய இசைவளித்துத் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி (பொறுப்பு)  குலுவாடி இரமேசு (Huluvadi G. Ramesh) நீதிபதி சுந்தர் ஆகியோருக்கும் தடையை விலக்கும் வகையில் வழக்குகளைத் திரும்பப் பெற்றவர்களுக்கும் வில்சன், வீர கதிரவன், ஆர்.விடுதலை ஆகிய வழக்குரைஞர்களுக்கும் தீர்ப்பினைச் செயல்படுத்திய தமிழக அரசிற்கும் கோரிக்கை வைத்த திமுகவின் குடும்பத்தினருக்கும் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கிறோம்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். (திருவள்ளுவர், திருக்குறள் 666)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல

Thursday, September 14, 2017

எத்தனை திலீபன்கள் வந்தாலும் நாம் விழித்தாலன்றி விடியாது! – இலக்குவனார் திருவள்ளுவன்

எத்தனை திலீபன்கள் வந்தாலும் நாம் விழித்தாலன்றி விடியாது!

செட்டம்பர் திங்கள் திராவிட இயக்க வரலாற்றிலும் தமிழின வரலாற்றிலும் முதன்மையான திங்களாகும்.
செட்டம்பர் 15, பேரறிஞர் அண்ணா பிறந்த நாள். செட்டம்பர் 16 தன்மதிப்புச் சுடரொளி இராமச்சந்திரன் பிறந்த நாள். செட்டம்பர் 17  தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி பிறந்தநாள். தன்மானமும் உரிமையும் கொண்டவர்களாகத் தமிழர்கள் வாழ வேண்டும் என்று அவர்கள் கண்ட கனவு, அவர்களை எப்பொ ழுதாவது புகழ்வதால் நனவாகாது.
செட்டம்பரில்  நம் உள்ளத்தை அரித்துக்கொண்டிருக்கும் மற்றொரு துயரம், திலீபன் இந்தியாவை நம்பி அளித்த உயிர்க்கொடை! திலீபன் போன்று எத்தனையோ பேர் தங்கள் இன்னுயிர் கொடுத்தும் ஈழம் விடியவில்லையே!
1987 செப்டம்பர் 15  அன்று ஐந்து  வேண்டுகோள்களை முன்வைத்து உண்ணா நோன்பிருந்தவர், அமைதிவழியை ஒப்புக்குப் பேசும் இந்திய வஞ்சகரால்   26.09.1987 அன்று  வீர மரணம் உற்றார்.
ஒரு தலைமுறை கடந்த பின்னரும்  திலீபனின் ஐந்து வேண்டுகோள்களில் ஒன்றுகூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது மட்டுமல்ல. மேலும் மோசமான நிலைக்குத்தான் அந்நாடு சென்று கொண்டிருக்கிறது.
  மீளக்குடியமர்த்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பது அவர் முதல் வேண்டுகோள். ஆனால்,  சிங்கள மக்களின் குடியமர்த்தல் மட்டுமல்ல, சிங்களப் படைத்துறையினரின் குடியிருப்புகள் தமிழர் பகுதியெங்கும் உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழர் நிலம் என ஒன்று இருக்கக் கூடாது என்பதற்காகத் தமிழர்களைச் சுற்றிலும் தமிழர்களின் மத்தியிலும் சிங்களர்கள் குடி யமர்த்தப்படுகிறார்கள்.
  சிறைக் கூடங்களிலும் இராணுவ, காவல் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற அவரது இரண்டாம் வேண்டுகோள் இன்றும் உயிரோடுதான் உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நிலை என்ன வென்றும் தெரியவில்லை.
  6 திங்கள் கடந்த பின்னரும் கேப்பாவுலவு மண்மீட்புப் போராட்டம் முடிவுறவில்லையே! சிறை வைக்கப்பட்டவர்கள், வலுக்கட்டாயமாக  இழுத்துச் செல்லப்பட்டவர்கள், மேலும் பல வகைகளில் சிங்களப்படையினராலும் சிங்களக் காவல்துறையினராலும் காணாமல் போக்கப்பட்டவர்கள் நிலை தெரியாமல் குடும்பத்தினர் படும் பாட்டிற்கு முடிவு வரவில்லையே!
  முள்ளிவாய்க்கால் முதலான ஈழப்பகுதிகளில் இனப்படுகொலை நடந்தது குறித்து வருத்தம்தான் தெரிவித்தோம். அத்துயரம் வராமல் தடுக்க  முயலவில்லையே அல்லது இயலவில்லையே! புலம் பெயர் தமிழர்கள் உலக அரங்கங்களில் முழங்கிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
முடிந்ததற்கு விடிவு தெரியாவிட்டால் போகிறது! இனியாவது இவற்றிற்கு முற்றுப்புள்ளி உண்டா? இல்லையே!
கொத்துக்குண்டுகளாலும் வேதியல் குண்டுகளாலும் குண்டுமாரி பொழிந்து கொன்றால்தான் இனப்படுகொலையா?
அன்றாடம் நிலப்பறிப்பாலும் உடமைப்பறிப்பாலும் கட்டாயக் கருத்தடையாலும் கற்பழிப்பாலும் காவற்கூடச் சித்திரவதைகளாலும் இனம் அழிந்து கொண்டு உள்ளதே! இந்த இன அழிப்பு குறித்து நாம் கவலைப்பட்டோமா?
இந்த நிலை தொடர்ந்தால் இலங்கை முழுவதும்  சிங்களர் நிலமாகவும் ஏதோ சில பகுதிகளில் தமிழர்கள் சிலர் சிங்களவர்களின் அடிமையாகவும் வாழும் நிலைதானே நிலவும்!
இது குறித்துக் கவலைப்படுகிறோமா?
தமிழ்நாட்டு உரிமைகளைப் பறிகொடுத்துக்கொண்டு வாளாவிருக்கும் நாமா, அண்டைநாட்டுத்தமிழர்களின் உரிமைகளை மீட்கப் போகிறோம்!
  உரிமையுள்ளவன்தானே அடுத்தவன் உரிமைக்குப் போராட முடியும்!  (இதை அன்றைக்குப் பெரியார் சொன்னதைத்தான் திரித்துக் கூறிக்கொண்டுள்ளனர்.)
 தமிழ்த்தேசிய இயக்கத்தினரும் திராவிட இயக்கத்தினரில் ஒரு பகுதியினரும் தமிழ் அமைப்பினரும் நம்  உரிமைக்கும் ஒட்டுமொத்த நம் இன உரிமைக்கும் குரல்  கொடுத்து வந்தாலும் அதிகாரப் பீடத்தில் அவர்களை அமர விடுவதில்லையே! அதிகாரமில்லாதவர்களால் என்ன செய்ய இயலும்?
 உரிமைக்குக் குரல் கொடுத்து அதிகாரத்திற்கு வந்தவர்கள், ஊழலுக்குத் துணை நின்றதால் உண்மையான பேச்சிற்கும் மதிப்பில்லாமல் போய்விட்டது.
  நாட்டுமக்கள் நலன் குறித்து  உழைக்க உணர்வூட்டியவர்கள் வீட்டுமக்கள் நலன்குறித்துப் பிழைத்தமையால் உண்மையையும் போலி என எண்ணத் தொடங்கும் போக்கு மேலோங்கியுள்ளது.
இதே போக்கு  தொடர்வது நல்லதல்ல!
  உண்மையை உணர்ந்து உண்மையின் பக்கம் நாம்  நிற்க வேண்டும்!
தமிழ்நாட்டில் தமிழ்  தொலைக்கப்படும் போக்கிற்கு முடிவு கட்ட வேண்டும்! தமிழ் தலைமையும் தமிழ்மக்கள் முதன்மையும் பெற நாம்  ஆன்றோர் பிறந்த திங்களிலே உறுதி எடுக்க வேண்டும்!
நாளும் தமிழினம்  ஈழத்தில் அழிவதை உணர்ந்து பிறருக்கும் உணர்த்தி,   01.01.1600 இல் தமிழ்நிலமாக விளங்கிய இலங்கைப்பகுதி தமிழ் ஈழமாக மலரக் கருத்துப் புரட்சியை விதைக்க வேண்டும்!
உலக ஆன்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள்  ஒத்துழைப்பால்  தமிழீழம்  உரிமையுடன் திகழ நாமும் பாடுபட வேண்டும்!
தமிழ் மக்களாக இருந்தும் தமிழைப் படிக்காமல் அயலவர் ஆகும் நிலை  பல நாடுகளில் நிலவுகிறது. ஆங்காங்கே இதனைப்போக்கத் தமிழ் அமைப்பினர் பாடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஒல்லும் வகை உதவி, தமிழ் மக்கள் தமிழை மறக்காமல் உரிமையுடைய தமிழர்களாக வாழ வகை செய்ய  வேண்டும்!
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று. (திருவள்ளுவர், திருக்குறள் 967)
வாழ்க தமிழ்!   வெல்க தமிழினம்! ஓங்குக வையகம்!
 –  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 இதழுரை  அகரமுதல 203, ஆவணி 25, 2048 / செட்டம்பர் 10, 2017

Followers

Blog Archive