Thursday, December 4, 2025

தொல்காப்பியமும் பாணினியமும் – 12 : பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரும் மோசடி– இலக்குவனார் திருவள்ளுவன்



(தொல்காப்பியமும் பாணினியமும் – 11 : முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர்– தொடர்ச்சி)

தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்த நடுநிலையான பொருளுரையைப் பேரா.ப.மருதநாயகம் அளித்துள்ளார். பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரிய மோசடி, ஏமாற்றுவேலை. ‘ஆதிபாஃசா’ நூலில் சட்டம்பி அடிகளார், தமிழிலிருந்து பிராகிருதமும் பிராகிருதத்திலிருந்து சமற்கிருதமும் தோன்றியது என்னும் வரலாற்று உண்மையை மெய்ப்பிக்கிறார். பேரா.சி.இலக்குவனார் அவர்களும் அவர் வழியில் அறிஞர்கள் பலரும் தொல்காப்பியத்தில் இடம் பெற்ற இடைச்செருகல்களை நீக்கினால் தொல்காப்பியம் முரண்பாடு இன்றிச் செம்மையாக இருக்கும் என நிறுவியுள்ளனர். இவை போன்ற அறிஞர்களின் கருத்துகளை எடுத்துக் கூறித் தொல்காப்பியம் சமற்கிருதத் தழுவலன்று எனத் தெரிவிக்கிறார்.(இலக்குவனார் திருவள்ளுவன், தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்)

ஒலியன்கள்

தமிழில் ஒலியன்கள் சரியாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் எழுத்துகளை உருவாக்கியவர்கள் ஒலியன்கள்பற்றி நன்கு அறிந்திருக்கின்றனர். அறிவியல் கருவிகள் இல்லாத காலத்திலேயே தமிழ்ப் பேச்சொலிகளைத் துல்லியமாக அடையாளம் காட்டியிருப்பது வியப்புக்குரியது என ஒலியனியல் வல்லுநர் தானியல் இயோன்சு(Daniel Jones) வியந்து பாராட்டுகிறார். சமற்கிருத இலக்கணம்-மொழியியல் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர்பணினி. இவர் அம்மொழியின் ஒலியனியல், உருபனியல் என்பவை தொடர்பில் அறிவிய் அடிப்படையிலான பகுப்பாய்வுகளைச் செய்துள்ளா் என்று விக்கிபீடியா கூறுகிறது.மேலும் சில தளங்களிலும் இக்கருத்துகளைக் காணலாம். இதற்கெல்லாம் காரணம் தொல்காப்பியம் இன்றைய ஒலியனியல் கருத்துகளை அன்றே அறிவியல் அடிப்படையில் கூறியுள்ளார் என அறிஞர்கள் கூறுவதால் பாணினியத்திலும் இருப்பதாகப் பொய்யுரைப்பதே ஆகும்.

அரித்தாட்டில் காலத்திற்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே நடைமுறையில் இருந்த தமிழ்நெறி

மிக்குசிகன் மொழியியல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஏ.எல்.பெக்கர்(A.L.Becker), கீத்து தெயிலர்  (Keith Tailor) ஆகிய இருவரும் தொல்காப்பியர் அறிவுலகிற்குச் செய்த பணி பிளேட்டோவும் அரிட்டாட்டிலும் மேலை அறிவுலகிற்குச் செய்த பணியை ஒத்தது எனப் பாராட்டுகின்றனர். இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியர் பேரா.முனைவர் சி.இலக்குவனார், “… ஆதலின், கிரேக்க நாட்டு அரிட்டாட்டில் காலத்திற்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே தமிழகத்தில் இலக்கிய நெறி முறைகள் வகுக்கப்படுப் பயிலப்பட்டுப் பாடப்பட்டு வந்தன என அறியலாம்.” (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 149-150) என்கிறார்.

மொழியியலின் மீவுயர் பேராசன்

புலப்பாட்டுநெறி, யாப்பிலக்கணம், கவிதையியல் ஆகியவைபற்றிய முழு இலக்கணம் தந்தவரென்றும் மொழியின் அடித்தளப் பேச்சு வழக்கிலிருந்து கவிதை மொழி வரையிலான மொழியின் எல்லாக் கூறுகளையும் மொழியியல் ஆய்விற்கு உரிய பொருளாக எடுத்துக் கொண்டவரென்றும் மொழியியலின் மீவுயர் பேராசன் என்று அழைக்கப்பட வேண்டியவரென்றும் தொல்காப்பியரின் உயர்வை ஏ.கே.இராமானுசன் சிறப்பிக்கிறார்.(முனைவர் மருதநாயகம், வடமொழி ஒரு செம்மொழியா?, பக்கம் 606)

இடைச்செருகல்கள்

தமிழ் நூல்களிலான இடைச்செருகல்கள் அதன் அழகையும் மதிப்பையும் குறைக்கவும் ஆரியததைத் திணிக்கவும் உண்டாக்கப்பட்டவை. என்று ஆய்வறிஞர்கள் நிலை நாட்டியுள்ளனர். சமற்கிருத நூல்களில் உள்ள இடைச்செருகல்கள் அவற்றுக்கு இல்லாச் சிறப்புகளை இருப்பதுபோல் காட்டுவதற்காகத் திணிக்கப்பட்டவைஏ.சி.பருனல்(The Ainthira school of sanskrit grammarians , பக்.102)

முனைவர் சி இலக்குவனார் தம் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொல்காப்பிய நூலில், மரபியல் பகுதியில் 24 நூற்பாக்களை உடுக்குறி(*)யால் இடைச்செருகல் எனப் பாகுபடுத்தியுள்ளார்.

மக்களில் பிறப்பால் வரும் நான்கு வருண உடைமைகளைக் கூறும் நூற்பாக்கள் 15 (71-85); செய்யுளியலில் கூறாமல் மரபியலின் இறுதியில் தொடர்பில்லாமல் சேர்க்கப்பட்டிருக்கும் 9 நூற்பாக்கள்; ஆக  24 நூற்பாக்கள். மேலும், அகத்திணையியலில் பிரிவைப் பற்றிச் சொல்லும்போது, 13 நூற்பாக்களில் (24 முதல் 36) குலப் பிரிவு சேர்க்கப்பட்டுக் குழப்பம் செய்யப்பட்டுள்ளது. இவையும் இடைச்செருகல்கள் என்பது தெளிவு.

இவை இடைச்செருகல்களே என்பதை உரையாசிரியர்களின் மேற்கோள்களால் அறியலாம். சங்கநூல் பாடல்களில் இவற்றிற்கான மேற்கோள் பாடல்கள் இல்லாமல் பண்டைய உரையாசிரியர்களே புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கல விருத்தி முதலான பிற்கால நூல் தரும் பாடல்களைத் தருகின்றனர்

இடைச்செருகல்கள் குறித்து அப்போது நிதியமைச்சராக இருந்த பேராசிரியர் அன்பழகன், சென்னை புத்தகக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில்(2.01.2010) நடைபெற்ற நிகழ்ச்சியில், “தொல்காப்பியர் காலத்தில் இல்லாத மரபுகள், கலாசாரங்கள், மேல்சாதி – கீழ்சாதி முறைகள், 4 வகை சாதி அமைப்புகள், மனு வருணாசிரம முறைகள் குறித்த கருத்துகள் உரைகளில் இடைச்செருகல்களாகப் புகுந்துள்ளன.

இந்த இடைச்செருகல்கள் களையப்பட்ட உரையைத் தொல்காப்பியத்துக்கு எழுத ச.வே.சுப்பிரமணியன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் முன்வர வேண்டும்”. எனப் பேசியுள்ளார்.

இவ்வுரையை ஒருவர் மின்மடலாடல் குழு ஒன்றில் பகிர்ந்துள்ளார். தமிழே தெரியாமல் ஆனால்  தங்களைத் தமிழறிஞர்களாகக் காட்டிக்கொண்டு தமிழுக்கு எதிராக எழுதியும் பேசியும்  வரும் கும்பல் எப்பொழுதும் இயங்கிக் கொண்டுள்ளது. அத்தகைய கும்பல் அறிஞர்கள் எவற்றை ஏன் இடைச்செருகல்களாகக் குறிப்பிடுகிறார்கள் என்றெல்லாம் ஆராயாமல், அவற்றிற்கு எதிரான மறு கருத்து இருப்பின் அவற்றைத் தெரிவிக்காமல் பொதுவாக மறுத்து எழுதியுள்ளனர். “நமக்குப் பிடிக்கவில்லை என்றால் இடைச்செருகல் என்பதா? ஏன், பிற இடைச்செருகல்களாக இருக்கக் கூடாது? தொல்காப்பியர் காலத்திலேயே சாதிப்பாகுபாடு இருந்தது. தொல்காப்பியம் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தது” என்பனபோன்று  எழுதியுள்ளனர். இவை போன்ற கருத்துகளைத் தம் கட்டுரைகளிலும் நூல்களிலும் தமிழ்ப்பகைவர்கள் உண்மைக்கு மாறாக எழுதியுள்ளனர்; எழுதி வருகின்றனர். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் தொல்காப்பிய இடைச்செருகல்கள் குறித்த கருத்துகளே வலிமை வாய்ந்தனவாக உள்ளன (தமிழ்த்துளி வலைத்தளம்). 

(தொடரும்)

Tuesday, December 2, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 1026-1030 : இலக்குவனார் திருவள்ளுவன்

     02 December 2025      கரமுதல



(சட்டச் சொற்கள் விளக்கம் 1021-1025 – தொடர்ச்சி)

1026. Avenue        வாய்ப்பு

அணுகு வழி

நிழற்சாலை  

Avenue என்பது நிழற் சாலையைக் குறித்தாலும் சட்டத்தில் வாய்ப்பு அல்லது அணுகு வழி என்ற பொருளில் வரும்.

ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்குத தீர்வு காண்பதற்காக அனைத்துச் சட்ட வழிகளையும அல்லது வாய்ப்புகளையும்  ஆராய்தல்.
 1027. average     சராசரி

நிரவல்,

நிரலளவு,
ஏறத்தாழ,
கிட்டத்தட்ட

சராசரி என்பது தமிழ்ச்சொல்லே. சரி விகிதமாக, சரிக்குச் சரியாக அமைவதால் சரிச்சரி > சராசரி ஆயிற்று.

சட்டத்தில் சராசரி என்பது சராசரி விதியைக் குறிக்கிறது.

சராசரிக் கூலி, சராசரி ஊதியம் முதலானவை தொடர்பாகச் சட்டவிதிகள் உள்ளன; வழக்குக் குறிப்புகள், தீர்ப்புரைகளும் உள்ளன.
1028. Average, excessசராசரி மிகை

நிரவல் மிகை

‘சராசரி மிகை’  என்பது ஒரு தரவுத் தொகுப்பில் உள்ள மதிப்புகள்.

‘மிகுதியின் சராசரி’ என்ற பொருளில் கருதக்கூடாது. அவ்வாறு கருதினால் மிகுதியாகக் கிடைப்பவற்றின் சராசரி என்றாகும். சராசரியினை விட மிகுதியாக உள்ளது என்னும் பொருளிலேயே பார்க்க வேண்டும்.

உண்மையான சராசரியை விட அதிகமாக மதிப்பிடப்படும் போக்கைக் குறிக்கிறது. சராசரி ஆதாயத்தை விட மிகுதியாகக் கிடைக்கும் ஆதாயத்தைத் தொழிலாளர் களுக்குப் பகிர்நதளிப்பது சிக்கலாகும் பொழுது இது சட்ட வரம்பிற்கு வந்து விடுகிறது.
1029. Averment               உறுதிக்கூற்று

வழக்காட்டத்தின் பொழுது, ஒரு செய்தி அல்லது நிகழ்வு அல்லது சூழல் அல்லது கூற்று அல்லது வாதம் அல்லது ஊகத்திற்கு எதிராக எண்பிப்பதற்காக மெய்யெனக் கூறும் உறுதிக் கூற்று.
1030. Averred        உறுதியாகச் சொல்லப்பட்டது.

வழக்கு மன்றத்தில் சட்டஆவணம் போன்ற மெய்யுரைக் கூற்றாகச் சொல்லப்படுவது.

சில இடங்களில் பாராட்டப் பட்டது எனக் குறிக்கப்படுகிறது.

காண்க: Averment

Sunday, November 30, 2025

குறட் கடலிற் சில துளிகள் 36 : நல்லார் தொடர்பைக் கைவிடாதே!-இலக்குவனார்திருவள்ளுவன்






(குறட் கடலிற் சில துளிகள் 35 : துணையில்லாதவர்க்கு நிலைபேறு இல்லை-தொடர்ச்சி)

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல். 

 (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௫௰ – 450)

நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பல பத்து மடங்கு தீமை ஆகும்.

பதவுரை

பல்லார் – பலர்; பகை – எதிர்ப்பு;பகைத்தல்; கொளலின் – கொள்வதைவிட ; பத்து – ஓர்எண்; அடுத்த – மேன்மேல்வருதல்;  தீமைத்தே – தீமையே; நல்லார் – நற்பண்புடைய பெரியோர்; தொடர் – தொடர்பை; கைவிடல் – கைவிடுதல் – கைவிட்டுவிடுதல்;

பத்தடுத்த என்பது பதின்மடங்கு என்பதைக் குறிக்கிறது. அடுக்கி வரும் பத்தின் எண்ணிக்கை எனக் கொள்ள வேண்டும்.

நல்லவர் தொடர்பைக் கைவிடக்கூடாது என்பதால் பல்லார் என்பதில் நல்லவர் அடக்கம் இல்லை எனலாம்.

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்

பல்லார் பகைகொள் பவன்.   (திருக்குறள், ௮௱௭௰௩ – 873)

எனத் திருவள்ளுவர் பலரின் பகை கொள்பவன் பித்துப்பிடித்தவரை விட அறிவிழந்தவன் என்கிறார்.

அத்தகைய பல்லார் தீமையை விட நல்லோர் தொடர்பைக் கைவிடலைப் பதின்மடங்கு தீமை என்கிறார்.

பகை என்பது ஒருவரின் வளர்ச்சிக்கு ஆக்கத்திற்கு ஊக்கத்திற்குத் தடையாய் அமையும்; தீங்கு விளைவிக்கும்; முன்னேற்றத்தைத் தடைப்படுத்தும். முயற்சி மேற்கொண்டு பகையை வெல்லலாம்; வாகை  சூடலாம். என்றாலும் அதற்கு முன்னதாகப் பகையால் விளையும் தீமை தீமைதானே. அவ்வாறான தீமைகளை விடப் பன்மடங்கு தீமைகள் நல்லோர் தொடர்பைக் கைவிடுவதால் விளையும் என்கிறார் திருவள்ளுவர். நல்லோர் தொடர்பு ஒருவருக்குத் தீமைகளிலிருந்து காக்கும் கேடயமாக விளங்கும். அத்தகைய காப்பு கருவியைப் புறக்கணித்தால் பெருந்தீங்குகள் அல்லவா விளையும்? எனவேதான் நல்லார் தொடர்பைக் கைவிடுதலைப் பெருந்தீங்காகத் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

முனைவர் சாலமன் பாப்பையா, அதிகாரம் முழுவதிலும் பெரியார்  என்பதைத் துறைப் பெரியவர் என்றே குறிப்பிடுகிறார். எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அந்தந்தத் துறைப் பெரியவர் நட்பும் உறவும் தொடர்பும் தேவை என்கிறார். பெரியார் என்பதற்கு அறிவிலும் பட்டறிவிலும் பண்பிலும் பெரியார் எனப் பிறர் கூறுகையில் இவர் மாறுபடக் கூறுவதும் சரியே. என்றாலும் துறைப்பெரியவராய் இருப்பினும் பண்பிற் சிறந்தவராயும் இருத்தல் வேண்டும்.

கடுவெளிச்சித்தர்

வல்லவர் கூட்டத்திற் கூடு

என்றும்

நல்லவர் தம்மைத்தள் ளாதே

என்றும் கூறுகிறார்.

இதனையேதான் திருவள்ளுவர் நல்லார் தொடர்பைக் கைவிடுவதன் தீமையைக் கூறுவதன் மூலம் நல்லார் தொடர்புடன் இருக்க வலியுறுத்துகிறார்.

எனவே, நல்லார் தொடர்பைப் பற்றிக் கொண்டு

நல்லன அடைந்து சிறப்போம்

– 
















































இலக்குவனார் திருவள்ளுவன் 

Saturday, November 29, 2025

நாலடி நல்கும் நன்னெறி 19: – பிறருக்குக் கொடுப்பதைக் கடமையாகக் கொள்க: இலக்குவனார் திருவள்ளுவன்

 



(நாலடி நல்கும் நன்னெறி 18: – செய்யும் செயல்களுக்கேற்பவே நன்மை தீமை விளையும்: தொடர்ச்சி)

உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி

இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; – கொடைக்கடனும்

சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார்

ஆஅயக் கண்ணும் அரிது.   

(நாலடியார், 184)

மழை பெய்யாத கோடைக் காலத்திலும், நீர் சுரக்கும் கேணி தன்னிடம் உள்ள தண்ணீரைப் பிறர் இறைத்து உண்ணக் கொடுத்து ஓர் ஊரைக் காப்பாற்றும். அது போலப், பெரியோர் வறுமையில் வாடித் தளர்ந்த காலத்திலும் பிறர்க்குக் கொடுப்பர். ஆனால் பெருமையற்ற சிறியோர் செல்வம்  மிகுதியாக உள்ள காலத்திலும் பிறர்க்குத் தரமாட்டார்கள்.

பதவுரை:

உறைப்பு=மழை; அரு காலத்து=அருகிய இல்லாக் காலத்திலும்; ஊற்று நீர்=ஊற்று நீருள்ள; கேணி= கிணறானது; இறைத்து=நீரை இறைத்து; உணினும்=உண்டாலும்;ஊர் ஆற்றும்=ஊரைக் காப்பாற்றும்;  என்பர்=என்று சொல்வர்; (அதுபோல்); கொடை = பிறர்க்குக் கொடுக்கும்; கடனும்=முறைமையும்; சாயக்கண்ணும்=(வறுமையால்) தளர்ந்தவிடத்தும்; பெரியார் போல்=பெரியோர்களைப் போல்; மற்றையார்=சிறியோர்; ஆயக்கண்ணும்=செல்வம் உண்டாயினும்; அரிது= கொடுத்தல் அரிது.

ஆழிக்கிணறு, உறை கிணறு, கட்டுக்கிணறு, கூவம், கூவல், கேணி, தடம், தளிக்குளம், திருக்குளம், தொடு கிணறு, நடை கேணி, பிள்ளைக்கிணறு, பொங்கு கிணறு என நீர்நிலைகள் ஏறத்தாழ 50 உள்ளன. இவற்றுள் ஊற்றுநீர்க் கேணியைக் குறிப்பிடுவதன் காரணம், இயற்கையாக நீர் ஊறும் தன்மையுடையது. எனவே ஊற்றுக்கேணி இயல்பான கொடைத்தன்மை யுடையவர்களைக் குறிப்பதற்காக உரைக்கப்பட்டுள்ளது.

பொருள் குறைந்த காலத்திலும் பிறர்க்கு இயன்றது உதவவுவதே நற்பண்பாகும்.

வறுமையுற்ற காலத்திலும் நற்குடிப்பிறந்தோர் ஊற்று நீர் போல உதவுவர் என நாலடியார் 150 ஆம் பாடலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவரும்

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்

[திருக்குறள் ௨௱௰௮ – 218)

என்கிறார்.

அஃதாவது, பிறருக்குக் கொடுக்க முடியாத வறுமைக் காலத்திலும் ஒப்புரவாளர்கள் கொடுப்பதைக் கடமையாகக் கொண்டு வாழ்வர் என்கிறார்.

“செல்வத்துப் பயனே ஈதல்” எனப் புறநானூற்றில்(400) புலவர் நக்கீரனார் குறிப்பிடுகிறார். கொடையைப் பிறவிக்குணமாகக் கூறுகிறார் ஒளவையார். கொடையை வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தனர் தமிழ்ச்செல்வர்கள்.

செல்வம் இல்லாக் காலத்தும் உதவுவோர் பெரியோர். செல்வம் நிறைந்த காலத்தும உதவார் சிறியோர். நாம் பிறருக்குக் கொடுப்பதைக் கடமையாகக் கொண்டு வாழ வேண்டும்.

Thursday, November 27, 2025

தொல்காப்பியமும் பாணினியமும் – 11 : முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர்– இலக்குவனார் திருவள்ளுவன்

 




(தொல்காப்பியமும் பாணினியமும் – 10 : தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழர்களின் இரண்டு கண்களாகும். – தொடர்ச்சி)

முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர்

தொல்காப்பிய மொத்த நூற்பாக்கள் 1571 ஆகின்றன. இவற்றுள் எழுத்து அதிகாரத்தில் 57, சொல் அதிகாரத்தில் 72, பொருள் அதிகாரத்தில் 158, ஆக மொத்தம் 287 நூற்பாக்கள் தொல்காப்பியருக்கு முன் உள்ளவர்களின் கருத்தை மேற்கோளாகக் குறிப்பிடுவனவாகும்.” என்கிறார் பேராசிரியர் சி. இலக்குவனார்(தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பும் திறனாய்வும்: பக்கம் 15). இதனையே வரலாற்று நூலாகவும் கருத வேண்டும் என அவர் வலியுறுத்தும் இடத்திலும் பின்வரும் வகையிலும் அவர் விளக்குகிறார்: 

தொல்காப்பியர் தம்முடைய சமசுகிருதப் புலமை தமிழின் அழகையும், தனித் தன்மையையும், சிதைப்பதற்கு இடம் தரவில்லை.  வடவேங்கடம் தென்குமரி இடையே உள்ள கிடைத்த தமிழ் நூல்களின் அடிப்படையிலேயே தொல்காப்பியர் தம்முடைய சிறந்த நூலை யாத்துள்ளார் எனப் பனம்பாரனார் மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் ‘என்மனார்’ ‘என்ப’ ‘என்றிசினோர்‘  எனத் தம் முன்னவர்களைப் பற்றி 287 இடங்களில் குறிப்பிடுகின்றார். இத்தகைய மேற்கோள்களால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு நிலவிய தமிழ்மொழி தமிழ் இலக்கிய நிலைமை குறித்து அறிதற்கு இயலுகிறது. எனவே தொல்காப்பியத்தை விளக்க உரை நூலாக மட்டும் கருதாமல் வரலாற்று நூலாகவும் கருத வேண்டும்.” பேராசிரியர் சி. இலக்குவனார் (தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும்: பக்கம்-20)

தொல்காப்பியர் முன்னோரைச் சுட்டும் வகைகள்

தொல்காப்பியச் சூத்திரங்களுள் ஏறத்தாழ இருநூற்று அறுபது இடங்களில் தொல்காப்பியர், தமக்கு முன்பு இருந்தவரும் தம் காலத்தவருமான இலக்கண ஆசிரியர் பலரைப் பலபடியாகக் குறிப்பிட்டுள்ளார். (முனைவர் மா. இராசமாணிக்கனார், தமிழ் மொழி-இலக்கிய வரலாறு)

(1) ‘என்ப’- ‘மொழிப’ என்னும் முறைமை தொல்காப்பியத்தில் ஏறத்தாழ 147 இடங்களில் வந்துள்ளன.

(2) ‘என்மனார் புலவர்’ என்பது சுமார் 88 இடங்களில் வந்துள்ளது.

(3) ‘வரையார்’ என்பது 15 இடங்களில் வந்துள்ளது. 

(4) பிற சிறப்புடன் வந்துள்ள தொடர்கள் ஏறத்தாழ முப்பதாகும்.

(குறிப்பு; அப்படியானால் 250+30=280 ஆகிறது.)

 இத்தொடர்கள் தாம் சுவையுடையவை. ஆதலின், அவற்றை அதிகார முறைப்படி ஒன்றன்பின் ஒன்றாக இங்குக் காண்போம்:

  1. நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே-நூற்பா 7.
  2. ஒத்த தென்ப உணரு மோரே- நூற்பா 193. 
  3. செவ்வி தென்ப சிறந்திசி னோரே – நூற்பா 295. 
  4. புகரின்று என்மனார் புலமை யோரே – நூற்பா 369
  1. உளவென மொழிப உணர்ந்திசி னோரே- நூற்பா 116
  2. வழுக்கின் றென்ப வயங்கி யோரே – நூற்பா 119 
  3. விளியொடு கொள்ப தெளியு மோரே – நூற்பா 153
  4. ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே – நூற்பா 158. 
  1. இயல்பென மொழிய இயல்புணர்ந் தோரே – நூற்பா 4 
  2. புலனன்குணர்ந்த புலமை யோரே – நூற்பா 14 
  3. கொள்ளும் என்ப குறியறிந் தோரே – நூற்பா 50
  4. நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென
  5. வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே – நூற்பா 315 
  • இடையும் வரையார் தொடையுணர்ந் தோரே- நூற்பா 371 
  • வரைவின் றென்ப வாய்மொழிப் புலவர் – நூற்பா 383
  • யாப்பென மொழிப யாப்பறி புலவர் – நூற்பா 380
  • வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்

நாற்பேர் எல்லை அகத்தவர் வழங்கும்

யாப்பின் வழியது என்மனார் புலவர்  – நூற்பா 384 

  • பொழிப்பென மொழிதல் புலவர் ஆறே – நூற்பா 403 
  • ஒன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே – நூற்பா 406 
  • தெரிந்தனர் விரிப்பின் வரம்பில ஆகும் – நூற்பா 407
  • நூல்நவில் புலவர் நுவன்றறைந் தனரே – நூற்பா 457
  • ஒத்தென மொழிப உயர்மொழிப் புலவர் – நூற்பா 472 
  • தோன்றுமொழிப் புலவரது பிண்டம் என்ப – நூற்பா 474
  • ஆங்கென மொழிய அறிந்திசி னோரே – நூற்பா 514 
  • தோலென மொழிப தொன்னெறிப் புலவர் – நூற்பா 539 
  • புலனென மொழிய புலனுணர்ந் தோரே – நூற்பா 542 
  • நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே – நூற்பா 571 
  • நூலென மொழிய நுணங்குமொழிப் புலவர் – நூற்பா 644
  • சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர் – நூற்பா 646

சுவை பயக்கும் இத் தொடர்களை, அவையுள்ள இயல்களையும் நூற்பாக்களையும் கொண்டு ஆராய்ந்து முடிபு கூறல் அழகிதாகும். இத் தொடர்கள் பலதுறைப் புலவர்களைச் சுட்டுதல் தெற்றென விளங்குதல் காண்க; இவற்றை நோக்கும் அறிஞர் சிறப்பாகப் பொருளதிகாரத்தில் வரும்

4, 5, 7, 8, 9, 11, 12, 14, 15, 16, 20 ஆம் எண்கள் சுட்டும் தொடர்களைக் காண்கையில், மேற் கூறப்பெற்ற உண்மையை எளிதில் உணர்வர். (முனைவர் மா. இராசமாணிக்கனார், தமிழ் மொழி-இலக்கிய வரலாறு)

(தொடரும்)

Followers

Blog Archive