முன் அட்டை -தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், திரு ; mun-attai_poaraali_ilakkuvanar_ila-thiru

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

[ஙா] 1.முன்னுரை – பிற்பகுதி

  தேவை உறுநருக்கு உதவுவதும் கடமை தவறுநர்க்கு இடித்துரைப்பதும் போராளியின் கடமைதானே. மாணாக்கர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் அவர் பரப்பிய தமிழுணர்வு தமிழ் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. பரப்புரைகளில் இலக்கியச் சிறப்புகளுடன் தமிழுக்கு ஏற்பட்டுள்ள தீங்கையும் காக்கும் கடப்பாடு ஒவ்வொருவருக்கும் உள்ளதையும் விளக்கினார் பேராசிரியர்.
தமிழ், தமிழினம், தமிழிலக்கியம் இவற்றில் ஒன்றுபோம் எனில் மற்றவும் ஒழியும்.” (பாவேந்தர் பாரதிதாசன்) என்பதையே எல்லா இடங்களிலும் தொடக்கம் முதலே வலியுறுத்தினார் பேராசிரியர்.
வண்டமிழ் நைந்திடில் எது நம்மைக் காக்கும்?” (பாவேந்தர் பாரதிதாசன்) என்பதைப் பொதுமக்களிடம் ஆழமாக விதைத்தார் பேராசிரியர்.
நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்” (பாவேந்தர் பாரதிதாசன்) என ஒவ்வொருவரும் எண்ண வேண்டும் என்பதற்கேற்ப, பேராசிரியர் செந்தமிழாய்த் திகழ்ந்தார்.
 இவ்வாறு தமிழுக்காக வாழ்ந்து தமிழாய் வாழ்ந்த பேராசிரியரின் பல்துறைப் புலமையையும் பன்முக ஆளுமையையும் தமிழ்ப்பகைக்கு எதிரான போராட்டச் செயல்பாடுகளையும் தமிழுலகம் போற்றத் தவறவில்லை. பேராசிரியரைக் குறித்த மதிப்பீடுகளே பேராசிரியரைத் தமிழுலகம் அடையாளம் தெரிந்து வணங்கியதற்குச் சான்றாகும். சான்றுக்குச் சில பார்ப்போம்.
அளப்பரிய தொண்டாற்றிய பெருமகனார்,
ஆற்றல் களஞ்சியம்,
இருபதாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள்,
இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர்,
இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர்,
இருபதாம் நூற்றாண்டு நக்கீரர்,
இலக்கணப் புலமையும் இலக்கியப் புலமையும் மிக்கவர்,
இலக்கணச் செம்மல்,
உத்தமர்,
உயர் பண்பாளர்,
உழைப்பால் உயர்ந்தவர்,
எழுத்துலகின் இளங்கோ,
எளியநடையும் புதிய நோக்கும் கொண்ட படைப்பாளர்,
குறள்நெறி பரப்பும் கொள்கைவீரர்,
குறள்நெறிக் காவலர்,
சங்கத்தமிழ் வளர்த்த சான்றோர்,
செந்தமிழ்மாமணி,
செந்தமிழ் நலம் பேணும் செல்வர்,
தமிழே மூச்சென உயிர்த்து வாழ்ந்தவர்,
தமிழர்மாண்பு பேணும் மாண்பினர்,
தமிழாக்கத் தொண்டினர்,
தமிழுலகு போற்றும் தலைவர்,
தமிழுக்காக வாழ்ந்து தமிழாய் வாழ்ந்தவர்,
தமிழுக்காக உழைத்தவர்,
தமிழுக்கும் தமிழர்க்கும் பாடுபட்டவர்,
தமிழ் வாழ்விற்காக வாழ்ந்தவர்,
தமிழ் ஞாயிறு,
தமிழ் மொழியின் தனிச்செல்வர்,
தமிழ்க் கொண்டல்,
தமிழ்க்கென வாழ்ந்து தமிழாய்ச் சிறந்தவர்,
தமிழ்க்காப்பினை இலக்காகக் கொண்டவர்,
தமிழ்த்தாயின் தவப்புதல்வன்,
தமிழை நினைந்து தம்மை மறந்தவர்,
தன்மானப் பெரும் புலவர்,
தொல்காப்பியச்செல்வர்,
தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் இரு கண்களாகக் கண்டவர்,
பண்பாட்டின் காவலர்,
பயிற்சிமொழிக்காவலர்,
பழமைக்கும் மறுமலர்ச்சிக்கும் பாலமாய் இருந்தவர்,
பழுத்த தமிழ்ப் புலமை வாய்ந்தவர்,
புலவர்சீர் பரவுவார்,
புதுமைப் பார்வை கொண்டவர்,
பைந்தமிழ் வளர்த்த ஐந்தமிழ்ப் புலவர்,
பைந்தமிழ்த்தாய் ஈன்றெடுத்த பாவலன்,
மன்பதைக்கு எடுத்துக்காட்டானவர்,
முத்தமிழ்க்காவலர்,
முத்திரை பதித்த இதழாளர்,
முதுபெரும் புலவர்
என்றும் இவை போன்று மேலும் பல்வகையாகவும் பேராசிரியரை     ஆன்றோரும் சான்றோரும் குறிப்பிடுவன பேராசிரியரின் பண்பு நலன்களுக்கும் புலமைத் திறத்திற்கும் தமிழ் நல வாழ்க்கைக்கும் எடுத்துக் காட்டாவன. பொதுவாகப் பிற அறிஞர்களைப்பற்றியும் பல்வகைப் பாராட்டுரைகள் அமைந்திருக்கலாம்; எனினும் பேராசிரியர் மக்களுக்கான அறிஞர் என்ற சிறப்பில் மிகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இவை தவிர, பேராசிரியரின் போர்க்கள வாழ்வைப் படம்பிடிப்பன போன்று அமைந்த பின்வரும் தகைமை மொழிகள் வேறு யாரையும் குறித்துச் சொல்லப்படவில்லை:
இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி,
இந்தி எதிர்ப்புப் போருக்கு மூலவர்,
எதிர்நீச்சலில் எரிகதிர் நித்திலம்,
கிளர்ச்சியாளர்,
கூண்டிலே அடைக்க முடியாத சிங்கம்,
சிறையே தவம் செய்த சீமான்,
செந்தமிழ்ப் படையின் மானச்செம்மல்,
தமிழ் இயக்கத்தின் ஆணிவேர்,
தமிழ் எழுச்சியின் உருவம்,
தமிழ் காத்தத் தானைத் தலைவர்,
தமிழ்க்காப்புத் தலைவர்
தமிழ்காக்கச் சிறை சென்றவர்,
தமிழ்த்தாய்,
தமிழ்ப்போராளி
தமிழர் தளபதி,
தமிழியக்கம்,
தமிழுக்காகத் தன் வாழ்வைப் பணயம் வைத்த அஞ்சா நெஞ்சர்,
தலைமைத் தலைவர்,
திராவிட இயக்க வெற்றிகளுக்கு வித்திட்டவர்,
புரட்சிக் கவிஞரின் தமிழ் இயக்கத்திற்குச் செயல் வடிவம் கொடுத்தவர்,
புரட்சிப் பேராசிரியர்,
புரட்சியாளர்,
போர்க்குணம் கொண்டோர்களின் வழிகாட்டி,
முத்தமிழ்ப் போர்வாள்,
மொழிக்காக வாழ்வை ஈந்த புரட்சிப்புயல்,
போர்க்குணம்கொண்டவர்,
வீரத் தமிழ்த் திருமகன்
  இவ்வாறு வெற்றியையும் தலைமையையும் புரட்சியையும் குறிப்பன புரட்சிப் போராளியாகப் பேராசிரியர் வாழ்ந்தமையை அடையாளப்படுத்துவனவே.
  இத்தகைய மொழி இனம் காத்த பெரும்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் வாழ்க்கைப் பாதையில் சிலவற்றை நாம் பார்ப்போம்.
(தொடரும்)   
– இலக்குவனார் திருவள்ளுவன்