Monday, March 10, 2025

நிலையில்லாத உலகில் நிலைத்தப் புகழைப் பெற…! மன்னனுக்கு அறிவுறுத்திய புலவர்: இலக்குவனார் திருவள்ளுவன்

 

நிலையில்லாத உலகில் நிலைத்தப் புகழைப் பெற…! மன்னனுக்கு அறிவுறுத்திய புலவர்: இலக்குவனார் திருவள்ளுவன்



(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 2 : தொடர்ச்சி)

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே!

– புறநானூறு 165
– திணை : பாடாண் திணை
– துறை : பரிசில் விடை
– பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
– பாடப்பட்டோன் : குமணன்.

15 அடிகள் கொண்ட புறநானூறு 165 ஆம் பாடலின் முதலிரு அடிகளே இவை.

இவ்வுலகம் நிலையில்லாதது. நிலையில்லா உலகில் நிலைபெற வேண்டின் புகழை நிலைநிறுத்த வேண்டும் என்கிறார் பெருந்தலைச் சாத்தனார்.

சாதலைக் காட்டிலும் துன்பமானது எதுவுமே இல்லை; ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தால் அச் சாதலும் இனியதே ஆகும் என்கிறார் திருவள்ளுவர்.

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை
. (திருக்குறள் – 230)

என்பதே அக்குறள்.

இதற்கு எடுத்துக்காட்டானவன் குமணன். காட்டில் தன்னை நாடி வந்த புலவர்க்குக் கொடுக்க ஒன்றுமே இல்லை என்ற நிலை வந்த பொழுது தன் உயிரையே கொடுக்கத் துணிந்தான்.

தன் தம்பி, தன் தலைக்கு விலை பேசியிருந்தமையால் தன் வாளைப் புலவரிடம் நீட்டித் தலையை வெட்டி எடுத்துச் சென்று அவன் தரும் பொருளைப் பெற்றுக்கொள்ளட்டும் என்றான்.

நிலையான வாழ்விற்கான வழியைக் கூறும் இப்பாடல் இவ்வாறு வரலாற்றுச் செய்தியைக் கூறுகிறது.

குறுநில மன்னனான குமணன் முதிர நாட்டை ஆண்டு வந்தவன். பாரி, ஓரி, காரி, எழினி, பேகன், ஆய், நள்ளி யென்ற வள்ளல்கள் எழுவருக்கு அடுத்து வாழ்ந்து புகழ் பெற்றவர் குமணன்.

அவன் நாட்டை அவன் தம்பி இளங்குமணன் கவர்ந்து கொண்டதால் அவன் காட்டில் தஞ்சம் புகுந்தான். புலவர் பெருந்தலைச்சாத்தனார் காட்டிற்குச் சென்று அவனைப் பாடினார்.

புலவருக்குத் தரக் குமணனுக்குத் தன்னைத் தவிர வேறொன்றும் இல்லை. ஆதலின் மகிழ்வுடன் குமணன் தன் வாளைப் புலவர்க்குக் கொடுத்தான். அந்த வாளை எடுத்துச் சென்று இளங்குமணனைப் புலவர் சந்தித்தார்.

“பரிசில் பெறாமல் பரிசிலன் வாடிச் செல்லுதல், தான் நாடு இழந்ததினும் மிகவும் இன்னாதது என எண்ணித், தன் தலையை எனக்குத் தரும் வகையில், அவன் வாளை என்னிடத்தே தந்தனன்.” என்றார் புலவர்.

உடனே இளங்குமணனுக்குத் தமையன் மீதான பாசம் பீறிட்டு வந்தது. அதனைக் கண்டு நெகிழ்ந்த புலவர், குமணன் உயிருடன் இருக்கும் உண்மையைக் கூறி இருவரையும் சேர்த்து வைத்தார்.

தாய், 10.03.2025


Saturday, March 8, 2025

குறள் கடலில் சில துளிகள் 22. உன்னைத் திருத்திய பின் ஊரைத் திருத்து! – இலக்குவனார்திருவள்ளுவன்

 

குறள் கடலில் சில துளிகள் 22. உன்னைத் திருத்திய பின் ஊரைத் திருத்து! – இலக்குவனார்திருவள்ளுவன்



(குறள் கடலில் சில துளிகள் 21. வருமுன் காத்திடு! – தொடர்ச்சி)

 

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்பிற்பின்

என்குற்றம் ஆகும் இறைக்கு

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்குற்றங்கடிதல்குறள் எண்: 436)

தன் குற்றம் கண்டறிந்து நீக்கிப் பிறர் குற்றம் காண்பவனுக்கு எக்குற்றமும் வராது என்கிறார் திருவள்ளுவர்.

ஆளுமையியலாளர்கள், பிறர் குற்றங்களைப் பார்க்கும் முன்னர் முதலில் உன்னைப் பார் (Look at yourself first, before looking on to others) என்கின்றனர்.

பரிமேலழகர், “அரசனுக்குத் தன் குற்றம் கடியா வழியே பிறர் குற்றம் கடிதல் குற்றமாம், அது கடிந்தவழி முறை செய்தலாம் என்பார், என் குற்றம் ஆகும் என்றார். எனவே தன் குற்றம் கடிந்தவனே முறைசெய்தற்கு உரியவன் என்பதாயிற்று.” என விளக்குகிறார்.

தன்னைத் திருத்திக் கொண்டபின் பிறரைத் திருத்த முற்படுபவனை யாரும் குறை சொல்ல மாட்டார். எனவே, ஒவ்வொருவரும் முதலில் தம்மிடம் உள்ள குறைகளை அறிந்து போக்கிக் கொள்ள வேண்டும். பிறரை வழிநடத்தும் பொறுப்பிலுள்ளவர்கள், தலைமை நிலையில் உள்ளவர்கள், தம்மிடம் எக்குற்றமும் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியும் ஏதும் குற்றம் உண்டானால் முதலில் அதைப் போக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு தம்மிடம் உள்ள குற்றத்தைப் போக்காமல் பிறர் குற்றம் குறித்துக் கூறினால்  “நீ என்ன ஒழுங்கு” என ஏளனத்திற்கு ஆளாக நேரிடும். பிறரும் தம்மைத் திருத்திக் கொள்ள மாட்டார். ஆனால், வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் இருந்து தம் குற்றத்தை நீக்கிக் கொண்டபின்னர் அடுத்தவர் குற்றம் குறித்துக் கூறினால் யாரும் இகழவோ பழிசொல் சொல்லவோ மாட்டார். மேலும் கூறப்படும் கருத்திற்கு மதிப்பளித்துச் சொற்படிக் கேட்பர்.

தன் குற்றம் என்றால் தன்னால் இயற்றப்படும் சட்டத்திலுள்ள குற்றம் எனக் கொண்டு, முதலில் சட்டத்தைத் திருத்தி அதன்பின்னனர் மக்களைத் திருத்த முற்பட வேண்டும் என்பாரும் உள்ளனர்.

அரசனாக இருந்தாலும் ஆள்வோனாக இருந்தாலும் தான் முதலில் எடுத்துக்காட்டாகச் செம்மையாகத் திகழ வேண்டும் என்பதே தமிழர் நெறி. அதிகாரம் மிக்க தன்னை யார் குற்றம் சொல்ல முடியும்? என்ன செய்ய முடியும்? என்று ஆணவத்தில் இருந்தால், ஆட்சியும் அழியும். ஆட்சிப் பொறுப்பிலுள்ளவனும் அழிவான்.

Friday, March 7, 2025

குறள் கடலில் சில துளிகள் 21. வருமுன் காத்திடு!- இலக்குவனார் திருவள்ளுவன்

 

குறள் கடலில் சில துளிகள் 21. வருமுன் காத்திடு!- இலக்குவனார் திருவள்ளுவன்



(குறள் கடலில் சில துளிகள் 20. குற்றம் என்னும் பகை – தொடர்ச்சி)

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்குற்றங்கடிதல்குறள் எண்: 435)

குற்றம் வரும் முன்னர்க் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை நெருப்பின் முன் உள்ள வைக்கோல் போல அழியும் என்கிறார் திருவள்ளுவர்.

ஆட்சியியல், வணிகவியல், இயந்திரவியல், மின்னியல், பயிரியல் முதலான பல துறை அறிஞர்களும் வரும் முன்னர்க் காத்திடுமாறு கூறுகின்றனர்.

வைத்தூறு=வைக்கோற்போர்; வைக்கோல் குவியல். வருமுன்னர் என்றால், துன்பம் வருவதன் முன் என மணக்குடவரும் பரிப்பெருமாளும் பரிதியும் கூறுகின்றனர். காலிங்கர் குற்றம் எய்துவதன் முன் என்கிறார். குற்றங் கடிதல் என்னும் அதிகாரத்தில் உள்ளதால்  குற்றம் வரும் முன் என்கிறார் பரிமேலழகர். குற்றத்தால் வரும் துன்பம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

வைக்கோல் எளிதில் தீப்பற்றிக் கொள்ளக் கூடியது. பொதுவாகப் பொதுவெளியிலேயே குவித்து வைக்கப்படுகிறது. சிறு தீ வைக்கோலில் பற்றிக் கொண்டாலும் விரைந்து பரவி வைக்கோல் குவியல் முழுவதும் அழியும். அது மட்டுமல்ல அதன் சுற்றுப்புறத்திலும் தீ பரவி மிகுந்த கேடு விளைவிக்கும். எனவே, வைக்கோல் பக்கம் தீப்பொருள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுபோல்தான் குற்றச் செயல் வராமல் காத்துக் கொள்ள வேண்டும். குற்றச் செயலில் ஈடுபட்டால் பொருளும் அழியும், புகழும் அழியும்.

குற்றச்செயலால் துன்பம் வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம்  என்றால் அதை உணரும் முன்னரே அழிவு வந்து விடும். எனவேதான் வரும் முன்னரே இக்குற்றச் செயலைச் செய்தால் இன்னவகைத் துன்பம் வரும் என்பதை அறிந்து குற்றச் செயலில் இறங்காமல் காத்துக் கொள்ள வேண்டும்.

குறள் கடலில் சில துளிகள் 20. குற்றம் என்னும் பகை- இலக்குவனார்திருவள்ளுவன்

 

குறள் கடலில் சில துளிகள் 20. குற்றம் என்னும் பகை- இலக்குவனார்திருவள்ளுவன்



(குறள் கடலில் சில துளிகள் 19. குற்றம் சிறிதாயினும் பெரிதாய் அஞ்சு! – தொடர்ச்சி)

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

அற்றம் தரூஉம் பகை

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்குற்றங்கடிதல்குறள் எண்: 434)

அழிவுதரும் உண்மையான பகை குற்றச் செயலே ஆகும். அதனால் குற்றமில்லா வாழ்க்கையை இலக்காகக் கொண்டு காத்திடுக என்கிறார் திருவள்ளுவர்.

குற்றத்தையே பகை எனக் கருதி நீக்கி வாழ்ந்தால் குற்றவாழ்வு இல்லாமல் போகும் எனத் தண்டனையியலாளர்கள் கூறுகின்றனர்.

அற்றம்=இறுதி, முடிவு. அற்றம் தருஉம் பகை=வாழ்க்கையை முடிவு கட்டும் பகை. ‘குற்றமே காக்க’ என்றால் ‘குற்றத்தையே பாதுகாக்க’ என்று பொருளல்ல.  ‘குற்றமே தன்னிடம் வாராமல் காத்துக்கொள்க’ என்று பொருளாகும். பரிமேலழகர் ‘தீமை காக்க’ என்பது ‘தீமை வாராமற் காக்க’ என்று எப்படிப் பொருள்படுமோ, அப்படிக் ‘குற்றமே காக்க’ என்பது ‘குற்றமே வாராமல் காக்க’ என்ற பொருள்தரும் என விளக்குகிறார்.

காலிங்கர், “குற்றம் நிகழாமல் கருதிப் பாதுகாத்துக் கொள்க” என்கிறார். பரிமேலழகர், “குற்றம் வாராமையே பயனாகக் கொண்டு காக்கவேண்டும்” என்கிறார். “குற்றம் உண்டாகாமல் இருக்கும நிலையைச் செல்வத்தைப் பாதுகாப்பதுபோல் கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று இன்றைய ஆசிரியர்கள் விளக்குகின்றனர். நாட்டையும் வீட்டையும் காக்க வேண்டும் என்றால் பொறுப்பில் உள்ளவர்கள். தம்மிடம் குற்றம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும். சிறு பொறியும் பெரு நெருப்பாவதுபோல் சிறு குற்றமும் பெருங்கேடாய் மாறும். குற்றம் என்பது சட்டத்திற்கு மாறான செயல்கள் மட்டுமல்ல. அறத்திற்கு முரணான பண்பற்ற செயல்களுமாம். எனவே, நற்பண்பு கொண்டு நல்லொழுக்கத்துடன் திகழ்ந்தால் அழிவு தரும் பகை உருவாகாது.

நாம் பகைவர்களாகக் கருதுபவர்களை விடக் குற்றச் செயலே அழிவு தரும் பகை; நம்மை மட்டும் அல்லாமல் நம்மைச் சார்ந்துள்ளவர்களையும் அழிக்கும் பெரும்பகை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவேதான், குற்றச் செயலை விலக்கி வைப்பதற்காகக் குற்றங்கடிதல் எனத் தனி அதிகாரத்தையே திருவள்ளுவர்  அளித்துள்ளார்.

குறள் கடலில் சில துளிகள் 19. குற்றம் சிறிதாயினும் பெரிதாய் அஞ்சு! – இலக்குவனார்திருவள்ளுவன்

 

குறள் கடலில் சில துளிகள் 19. குற்றம் சிறிதாயினும் பெரிதாய் அஞ்சு! – இலக்குவனார்திருவள்ளுவன்



(குறள் கடலில் சில துளிகள் 18. இம்மூன்றும் குற்றங்களாம் – தொடர்ச்சி)

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வர் பழிநாணு வார்

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்குற்றங்கடிதல்குறள் எண்: 433)

பழிக்கு அஞ்சுவோர், தம்மிடம் தினையளவு சிறு குற்றம் நேர்ந்தாலும் பனையளவாகக் கருதி வருந்துவர் என்கிறார் திருவள்ளுவர்.

சிறிய குற்றங்களையும் பெரிய குற்றங்களாகக் கருதி அஞ்சி வாழ்ந்தால் குற்றங்கள் குறையும் எனத் தண்டைனயியலறிஞர்கள் கூறுகின்றனர்.

தினை, பனை என்பன அக்கால அளவுப்பெயர்கள். தினை அரிசி மிகச் சிறியது. எனவே, சிறிய அளவைக் குறிக்கத் தினையளவு எனப்படுகிறது. பனை மரம் பேரளவினது. எனவே, பெரிய அளவைக் குறிக்கப் பனை அளவு எனப்படுகிறது. துணை என்னும் சொல் அளவைக் குறிக்கிறது. நாணுவார் = வெட்கப்படுவார்.

பண்பாளர்களால்தான் உலகம் நிலைத்து நிற்கிறது என்றுகூறும் கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி என்னும் பாண்டிய மன்னன், பண்பாளர்கள்,

பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்” (புறநானூறு 182) என்கிறார். அஃதாவது, பழிவரும் என்றால் உலகம் முழுவதையும் ஒருங்கே தந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்கிறார்.

அத்தகையோர் ஒருவேளை தினையளவு குற்றம் ஏதும் தம் செயலில் நேர்ந்தாலும் பனை அளவாக எண்ணி வெட்கப்பட்டு வருந்துவர்.  தினைத்துணை உதவி செய்தாலும் பனைத்துணையாகக்  கொள்ள வேண்டும் என்ற திருவள்ளுவர் (குறள் 104) அதே அளவுமுறைகளையே குற்ற அளவிற்கும் குறிக்கிறார். இதன்மூலம் தினையளவு குற்றமும் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

ஒவ்வொருவருமே தம்மிடம் குற்றம் நேராமல், தவறியும் குற்றச் செயல் புரியாமல் காத்துக் கொள்ள வேண்டும். என்றாலும் ஆட்சியில் உள்ளவர்கள், நிறுவனங்கள், தொழிலகங்கள், கல்வியகங்கள் முதலானவற்றை நடத்துவோர் பெரிதும் கண்ணுங்கருத்துமாக இருந்து சிறு குற்றமும் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இவர்களது சிறு குற்றமும் இவர்களைச் சார்ந்துள்ள மக்களுக்குப் பேரளவு தீமை விளைவிக்கும். செய்த குற்றம் சரி செய்ய முடியாத பெருந்துன்பத்தையும் விளைவிக்கும். ஆனால் இன்றைய அரசியலாளர்கள்  இது குறித்துக் கவலைப்படுவதில்லை. குற்றங்களையும் தண்டனைகளையும் வெற்றி மாலையாகக் காட்டிக் கொள்கின்றனர். இந்த அவலம் ஒழியும்போதுதான் குற்றமில்லா மன்பதையைக் காண முடியும்.

Followers

Blog Archive