(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 17 : பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்! – தொடர்ச்சி)

 “யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே”
               புறநானூறு 214 : 4-5

பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
சொற்பொருள்: பூழ் = சிறு பறவை; காடை (ஒருவகைப் பறவை)

“உயர்ந்த இலக்கு வெற்றியைத் தரும், தாழ்ந்த இலக்கு தோல்வியைத் தழுவும். முடியுமா முடியாதா என ஐயப்பட்டு முயலாமல் வாழ்பவர் நெஞ்சில் துணிவற்ற கோழைகள்” என்கிறார் கோப்பெருஞ்சோழன்.

மிகப்பெரும் விலங்காகிய யானையை வேட்டையாடச் சென்றவன் அதில் வெற்றி காணலாம். குறும்பூழ் என்னும் சிறிய காடைப் பறவையை வேட்டையாடச் சென்றவன் அதனைப் பெறாமல் வெறுங்கையுடன் திரும்பவும் செய்யலாம்.

உயர்வான எண்ணம்தானே நம்மை உயரச் செய்யும் என்கிறார்.

திருவள்ளுவர்,

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. (திருக்குறள், ௭௱௭௰௨ – 772)

என உயர்ந்த இலக்கே சிறந்தது என்று கூறுகிறார்.

இப்பாடல் உருவானதன் வரலாற்றுக் குறிப்பை நாம் காண வேண்டும்.

நல்லியல்புகள் நிறைந்த கோப்பெருஞ்சோழனுக்கு எதிராக அவரது பிள்ளைகள் இருவருமே மண்ணாசை காரணமாக எதிர்த்துப் போரிட முற்பட்டனர்.

இதனால் மனம் குமைந்த கோப்பெருஞ்சோழ வேந்தர் எதிர்த்துப் போரில் இறங்கினார்.

அவர் கோப்பெருஞ்சோழனை நோக்கி, “உனக்கு எதிராகப் போர் தொடுக்க வருபவர் உன் பகைவர் அல்லர். உன் மக்களே. உனக்குப்பின் அரசாட்சிக்கு உரியவர் இவர்களே!

நீ வென்ற பின்னர் இந்நாட்டை யாருக்கு அளிப்பாய்? ஒருவேளை நீ போரில் தோற்கும் நிலை வந்தால் உனக்கது பெரும்பழியைத் தருமல்லவா? ஆதலின் போரை விடுத்து நற்பணிகளில் நாட்டம் செலுத்துவாயாக!” என அறிவுரை வழங்கினார்.

இதனால் போரைத் துறந்தான் கோப்பெருஞ்சோழன். எனினும் தன் பிள்ளைகளே தனக்கு எதிராகப் போர் தொடுக்க முனைந்ததால் வெறுப்புற்று வடக்கிருந்து உயிர் துறக்கும் முடிவிற்கு வந்தான்.

வடக்கிருத்தல் என்பது யாதேனும் ஒரு காரணம் பற்றி உயிர் துறக்கத் துணிந்தோர் தூய்மையான தனி இடத்தில் வடக்கு நோக்கி இருந்து, உணவு முதலியன துறந்து, உயிர் விடுவதாகும்.

சோழவேந்தன் வடக்கிருந்த பொழுது உடனிருந்த சிலர், இதனால் என்ன நன்மை எனப் பேசத் தொடங்கினர்.

இதற்குக் கோப்பெருஞ்சோழன், “நல்வினைகள் செய்வதால் விண்ணுலகம் சென்று இன்பம் நுகரலாம். பிறவாமை அடையலாம்.

அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும் வளர்ந்து கொண்டே வரும் உயர்ந்த இமயத்தில் பறக்கும் கொடிபோல் அனைவரும் அறியும் வண்ணம் புகழ்ப்பேறு பெறலாம்” என்றார்.

“உயர்ந்ததை நோக்கமாகக் கொள்ளுங்கள்! நல்லதே நடக்கும்!” என நம்பிக்கை கொள்ளச் சொல்கிறார்.

இக்கருத்தைத் தெரிவிக்கும் பாடல் வரி

“இமையத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்,”
               (புறநானூறு 214 : 11-12)

என்பதாகும்.

இதில் உள்ள அறிவியல் உண்மையை நாம் புரிந்து கொண்டால் பழந்தமிழரின் அறிவியல் வளத்தை உணரலாம்.

உயர்ந்த இமயமலை என்று சொல்லாமல் ‘இமயத்து உச்சி உயர்ந்து வருவதுபோல் உயர்ந்த’ என்கிறார்.

இமயமலை ஆண்டுக்கு 5 கீழயிரைப் பேரடி(மி.மீ.) உயர்கிறது என்பது புவி அறிவியலும் மலையறிவியலும் ஆகும்.

இந்த அறிவியல் உண்மையை அறிந்ததால்தான் மன்னர் இவ்வாறு பாடியுள்ளார். உயரும் அளவு காலத்திற்கேற்ப மாறலாம். ஆனால் உயர்வது உண்மை.

இந்த அறிவியல் உண்மையுடன் கோப்பெருஞ்சோழன் நமக்கு அறிவுறுத்துவது என்ன?

“நற்பயன் கிட்டுமா, கிட்டாதா என ஆராயாமல் உயர்ந்ததையே எண்ணி உயர்ந்ததையே செய்க! அதற்குரிய பயன் தவறாமல் கிடைக்கும்” என்கிறார்.

நாமும் உயர்வை இலக்காகக் கொண்டு உரிய பயன் பெறுவோம்!