(குறள் கடலில் சில துளிகள் 12. உலகத்தார்வழியில்செல்வதேஅறிவு! – தொடர்ச்சி)

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்அறிவுடைமைகுறள் எண்: 427)

அறிவுடையார் எதிர்கால நிகழ்வை அறியக்கூடியவர். அறிவில்லாதவர் அறியும் திறன் இல்லாதவர் என்கிறார் திருவள்ளுவர்.

அறிகல்லாதவர்=அறிவதைக் கல்லாதவர்கள் = அறியமாட்டாதவர் அல்லது அறியமுடியாதவர்கள். அறிக + கல்லாதவர் =(அறிக என்பதன் ஈற்று எழுத்தான க மறைந்து) அறிகல்லாதவர் என்றும் சொல்லலாம்.

கண்ணுக்கு முன்னால் இருப்பதைக் கண்டு செயலாற்றுவோர் அரசியல்வாதியாவார்(politicians). நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வருவதை முன்னறிந்து செயலாற்றுவோர் அரசியலறிஞர் (Statesmen)” என்கின்றனர் அரசியலறிஞர்கள். இதனையே திருவள்ளுவர் இங்கே உரைக்கிறார்.

ஆள்வோர்க்கும் தொழில் முயல்வோர்க்கும் வணிகர்களுக்கும் தொழில் நடத்துநருக்கும் தொலைநோக்கு உணர்வு தேவை. குடும்பத்தினருக்கும் வரக்கூடிய சிக்கலை உணரும் அறிவு தேவை. எனவே, யாவராக இருந்தாலும் வரக்கூடியதை உய்த்து உணரும் திறன் இருந்தால்தான் வரும் இடர்களில் இருந்து தப்பிக்கலாம் அல்லது இழப்பைத் தவிர்க்கலாம் அல்லது இழப்பின் அளவைக் குறைக்கலாம். எனவே, வருவது அறிதலே அறிவாகிறது. வருவது உணரும் அறிவிலார் இடர்களைத் தவிர்க்கலாம் என்னும் பொழுது வருவது அறியா அறிவிலார் தீமைகளே அடைவர் என்பது சரிதானே!

கடந்தகாலச் சூழல் தொடர்பில் நிகழ்காலத்தில் நாம் செய்ய இருக்கும் செயல் அல்லது செய்து வரும் தொழில் தொடர்பாகவும் எதிர்காலக் கணிப்பு தேவை. திட்டமிடலில் வருவது உணர்தலும் அடங்கும்.

நாட்டு நிலையில் உள்நாட்டுச் சிக்கல்கள் வெளிநாட்டுச் சிக்கல்கள் தொடர்பில் கூடுதலாக வருவது அறியும் அறிவு இருந்தால்தான் நாட்டை நல்வழியில் நடத்த இயலும்; போர் இடர்களைத் தவிர்க்க முடியும்; உள்நாட்டுப் பகை, வெளிநாட்டுப் பகைகளில் இருந்து மக்களைக் காக்க இயலும். மக்களுக்குத் தேவையான உணவு வளம், நீர் வளம், நல்வாழ்வு முதலானவை குறித்தும் வருவது அறியும்  திறன் தேவை. அதுவே உண்மையான அறிவுடைமை.

(தொடரும்)