(குறள் கடலில் சில துளிகள் – 16. அறிவை உடைமையாக்குக!-தொடர்ச்சி)

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்குற்றங்கடிதல்குறள் எண்: 431)

அடுத்து வரும் குற்றங்கடிதல் முதலான ஆறு அதிகாரங்களையும் பேரா.சி.இலக்குவனார் ‘தள்ளற்பாலன சாற்றும் இயல்’ என்கிறார். இவற்றை நம் வாழ்விலிருந்து தள்ளிவிடுவதன் மூலம் நல்வாழ்வைக் கொள்ளலாம்.

செருக்கும் வெகுளியும் கீழ்மைப் பண்பும் இல்லாதவர் உயர்வு மேம்பாடானது என்கிறார் திருவள்ளுவர்.

தலைக்கனம், சினம், கீழ்மை முதலானவற்றில் இருந்து தலைவர் விலகித் (Stay away from these demons: Pride, Anger and Lust) தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என ஆட்சியியலாளர்கள் கூறுகின்றனர்.

பதவி, செல்வம், செல்வாக்கு முதலியவற்றால் வருவது செருக்கு. செருக்கு இருப்போர் மமதையில் திரிவர். நேரான பாதையில் செல்ல மாட்டார். எனவே, செருக்கு கூடாது. மணக்குடவர், பரிப்பெருமாள் ஆகியோர் “பிறர்மனை விரும்புதல் செருக்கினால் வருதலின் அதனைச் செருக்கு” என்கின்றனர்.

 சினம் என்பது சேர்ந்தாரைக் கொல்லி என்பதால் அதுவும் கூடாது. பரிமேலழகர், “செருக்கு என்றால் மதம். அஃதாவது, பெற்றதைப் பெரிதாக மதிக்கும் மகிழ்ச்சி”; “அளவிறந்த காமம் ‘சிறுமை’ எனப்பட்டது” என்கிறார். பரிப்பெருமாள், “சிறியார் செய்வன செய்தலாவது காமநுகர்ச்சியும், சூதும், கள்ளும், வேட்டையும் முதலானவற்றின் மிக்கொழுகுதல்” என்கிறார். பரிப்பெருமாள் மேலும்,  “சிறியார் செய்வன செய்தலாவது காமநுகர்ச்சியும், சூதும், கள்ளும், வேட்டையும் முதலானவற்றின் மிக்கொழுகுதல்” என்கிறார். “பிறர்மனை நயத்தலாற் கெட்டான் இராவணன்; வெகுளியாற் கெட்டான் சனமேசயன்; நுகர்ச்சியாற் கெட்டான் சச்சந்தன்” என எடுத்துக்காட்டுகளும் கூறுகிறார். பேரா.சி.இலக்குவனார், “காமம் ஒன்றுமட்டும் கூறினால், பொறாமை, பொய்மை, ஏமாற்று, நன்றி மறத்தல், வஞ்சகம் முதலிய இழிகுணங்களைத் தனியே கூறுதல் வேண்டும். ஆதலின் இழிகுணங்கள் அனைத்தையும் குறிக்கவே சிறுமை என்று கூறினார் என்றால் மிகப் பொருத்தம்” என விளக்குகிறார்.

இம்மூன்றும் யாருக்கும் இருக்கக்கூடாது. கண்டிப்பாக ஆள்வோருக்கு இருக்கக் கூடாது. ஆள்வோருக்கு ஆக்கத்திற்குக் கேடு தரும் இம்மூன்றும் இருப்பின் தாமும் அழிந்து நாட்டையும் அழிவுப்பாதையில் செல்ல விடுவர்.

(தொடரும்)